Sunday, 16 June 2019

மூன்றாம் இராஜேந்திர சோழனுக்குப் பிந்தைய சோழர் #7

நெல்லூர்ச் சோழரின் ஆட்சியில் காஞ்சி

நல்லசித்தா என்கிற புஜபல வீர நல்ல சித்தன்ன தேவ  சோழ மஹாராஜா - கி.பி 1187-1214 

நெல்லூர்ச் சோழரின் தொடர்ச்சியான வரலாறு, முதலாம் மனும சித்தா மூலம் கி.பி. 1175-ல் ஆரம்பிக்கின்றது. இவருக்குப் பின், இவரது தம்பி பெத்தாவின் மூன்று மகன்களான தயபீமா, நல்லசித்தா மற்றும் எறசித்தா ஆகியோர் ஆட்சியைத் தொடர்ந்தனர். இதில்  தயபீமா மற்றும் நல்லசித்தா ஆகியோர் இணைந்து ஆட்சி செய்தனர். இவர்களே காஞ்சியை நேரடிச் சோழர்களிடமிருந்து  வென்றவர்கள். இவர்களின் கால கட்டத்திலிருந்தே நெல்லூர்ச் சோழர்களின் ஆட்சி காஞ்சியில் ஆரம்பித்தது. நல்லசித்தா என்கிற புஜபல வீர நல்ல சித்தன்ன தேவ சோழ மஹாராஜா, காஞ்சியில் "கப்பம் கொண்ண" செய்தியை நெல்லூர்க் கல்வெட்டுகள் (G-1, K.V -13) குறிப்பிடுகின்றன. நல்லசித்தாவின் பட்டங்கள், அவன் சுதந்திரமாக ஆட்சி செய்ததற்கு அடையாளமாக விளங்குகின்றன. இரண்டு காலகட்டங்களில் நெல்லூர்ச் சோழர் சுதந்திரமாக செயல் பட்டிருப்பர் என நீலகண்ட சாஸ்திரிகள் குறிப்பிடுகிறார். அவை: 

1) கி.பி. 1183-92, மூன்றாம் குலோத்துங்கன் பாண்டிய நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த காலம். 

2) கி.பி. 1214 முதல், மூன்றாம் குலோத்துங்கனுடைய ஆட்சியின் இறுதிக்காலம் வரை- இது அவன் மீண்டும் பாண்டியருடன் போரிட்ட காலப்பகுதி.


எற சித்தா என்கிற புஜபல வீர  எற சித்தன்ன தேவ  சோழ மஹாராஜா - கி.பி 1195-1217

தயபீமா மற்றும் நல்லசித்தாவைத் தொடர்ந்து அவர்களின் தம்பி  றசித்தா கி.பி. 1195-லிருந்து 22 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். உறையூர் புரவராதீஸ்வரர், காஞ்சி புரவராதீஸ்வரர், காஞ்சிம் கப்பமு தின்னா  என்று அழைக்கப்பட்டவர்.   றசித்தாவின் மூன்று மகன்களான மனுமசித்தா, பெத்தா, தம்முசித்தா ஆகியோர் இவரது மூன்று கண்களைப் போல் இருந்தனர் என்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. மூன்றாம் குலோத்துங்கன் மற்றும் மூன்றாம் இராஜராஜனுக்கு அடங்கிய சிற்றரசராக இவர் ஆட்சி செய்துள்ளார். 

ராஜேந்திர மனும சித்தா (II) என்கிற வீர நல்ல சித்தர தேவ சோழ மஹாராஜா - (கி.பி 1199-1220)   

இவர்  ற சித்தாவின் முதல் மகன். மூன்றாம் குலோத்துங்கனின் 23-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இவரை நல்லசித்தரசன் என்று குறிப்பிடுகிறது. இவர் மூன்றாம் குலோத்துங்கனுக்கு அடங்கிய சிற்றரசராக ஆரம்ப கால கட்டங்களில் ஆட்சி செய்தாலும், இவரது ஆட்சியின் இறுதி கால கல்வெட்டுகள் குலோத்துங்கனைக் குறிப்பிடவில்லை. கி.பி 1214-ம் ஆண்டு கல்வெட்டொன்று, இவரை காஞ்சிம்கப்ப கொண்ணாட்டி என்று குறிப்பிடுகின்றன. இந்தக் காலகட்டத்திலிருந்து மூன்றாம் குலோத்துங்கனின் இறுதி ஆட்சிக் காலம் வரை இவர் தன்னாட்சி செய்திருப்பதாகத் தெரிகிறது. அதாவது மூன்றாம் குலோத்துங்கன் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் எதிர்ப்பைச் சமாளித்துக் கொண்டிருந்த வேளையில், காஞ்சியை மனுமசித்தா தனியாட்சி புரிந்துள்ளார். இதற்கு முன் இவரது பெரிய தந்தை நல்ல சித்தா, கி.பி. 1183-லிருந்து 1192 வரை தன்னாட்சி செய்து, பின்னர் மூன்றாம் குலோத்துங்கனால் அடக்கப் பட்டார். அதனைப் போன்றே மூன்றாம் இராஜராஜன் தலையிட்டு அடக்கும் வரை மனும சித்தா (II) தன்னாட்சி புரிந்துள்ளார். இந்த இரண்டு நிகழ்வுகளைத் தவிர, மூன்றாம் இராஜேந்திரரின் இறுதி ஆட்சிக்காலம் வரை, நெல்லூர்ச் சோழர்கள் நேரடிச் சோழர்களுக்கு உறு துணையாய் இருந்துள்ளனர்.

தம்முசித்தா - கி.பி 1205-1209   

இவர் ராஜேந்திர மனும சித்தா (II) வின் தம்பி. இவர் 5 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்துள்ளார். கி.பி. 1205 -ஆம் ஆண்டைச் சேர்ந்த இவரது ஆரம்ப காலக் கல்வெட்டு, சின்ன காஞ்சிபுரத்திலிருந்து கிடைக்கின்றது. கி.பி. 1208 -ஆம் ஆண்டில், மூன்றாம் குலோத்துங்கனின் வாரங்கல் படையெடுப்பின் போது, இவரும், ஏற சித்தா மற்றும் மனும சித்தா ஆகியோர் குலோத்துங்கன் சார்பாகப் பங்கேற்றிருக்க வேண்டும்.


#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 7   
#காஞ்சிச்சோழர்  

Sunday, 9 June 2019

மூன்றாம் இராஜேந்திர சோழனுக்குப் பிந்தைய சோழர் #6


காஞ்சிச் சோழர்  

மூன்றாம் இராஜேந்திர சோழனுடன் முடிவடைந்த நேரடிச் சோழர்களின் ஆட்சிக்குப் பின்பு, கி.பி. 14-15ம் நூற்றாண்டில்,  உறையூர்ச் சோழரின் ஆட்சித் தொடங்கும் வரையில், தமிழகத்தில் சோழர் என்றால், அது காஞ்சிச் சோழர்களைக் குறிப்பதாகவே இருந்தது. கி.பி. 1312-ல், காஞ்சிச் சோழரை வென்ற கேரள மன்னன் பாஸ்கர ரவிவர்மன், தன்னை சோழ நாட்டுப் பேரரசன் என்றும் திரிபுவனச் சக்கரவர்த்திகள் என்றும் கூறிக் கொள்கிறான். 

கி.பி. 12-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து கி.பி 14-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, நெல்லூர்ச் சோழர் காஞ்சியையும் ஒரு தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். கேரள மன்னன் பாஸ்கர ரவிவர்மன் காஞ்சிச் சோழரை வென்றதைப் போல, பாண்டியர்களும் அதே கால கட்டத்தில்  காஞ்சிச்சோழரான வீர கண்ட கோபாலனை வென்றதாகக் குறிப்பிடுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து காகதீயர்களின் தளபதி முப்பிடி நாயக்கர் படையெடுத்து வந்து பாஸ்கர ரவிவர்மனையும், பாண்டியரையும் வென்று காஞ்சியைக் கைப்பற்றி, மான வீர சோழமஹாராஜாவை ஆட்சியாளராக நியமித்தார். இதற்கு முன்னரும் பாண்டியர், நெல்லூர்ச் சோழரை வென்று காஞ்சியைக் கைப்பற்றிய போது, காகதீயர்கள் நெல்லூர்ச் சோழருக்குத் துணையாக வந்து காஞ்சியை மீட்டு மீண்டும் நெல்லூர்ச் சோழரை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். இதனை வைத்துப் பார்க்கும் போது, பாண்டியரால் தோற்கடிக்கப் பட்ட வீரகண்ட கோபாலனும், காகதீயர்களால் காஞ்சியின் ஆட்சியாளராக நியமிக்கப் பட்ட மானவீராவும் ஒருவராகவே இருக்கலாம். 

தெலுங்குச் சோழர்களில், மிகவும் வலிமை வாய்ந்த வம்சம் நெல்லூர்ச் சோழ வம்சம். இவர்களின் ஆட்சி, கிட்டத்தட்ட இரண்டரை நூற்றாண்டுகள் (கி.பி  1100-1350) நீடித்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்கள் ஆரம்ப கால கட்டங்களில் நேரடிச் சோழர்களுக்கும், பின்னர் காகதீயர்களுக்கும் அடங்கிய சிற்றரசர்களாக இருந்துள்ளனர். வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் தனியாட்சியும் புரிந்துள்ளனர். கி.பி. 13-ம் நூற்றாண்டு காலகட்டத்தில், தென்னிந்தியாவில் மிக முக்கிய சக்தியாக இவர்கள் இருந்துள்ளனர். 

நெல்லூர்ச் சோழ வம்சம் சங்ககால கரிகால சோழனின் வழி வந்தவர்கள். இந்த வம்சத்தில் முதலில் குறிப்பிடத் தக்கவர் மதுராந்தக பொத்தப்பிச் சோழன். இவர் மதுரையை வென்றதாகவும், பொத்தப்பி என்ற ஊரை உருவாக்கியதாகவும், இந்த காரணங்களால் இவர் இப்பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இவருக்கு அடுத்து குறிப்பிடத்தக்க மற்றோர் அரசன் விச்சயன்  எனப்படும் தெலுங்கு வித்யன். இவர் உஜ்ஜபுரி என்னுமிடத்தில் உச்சியில் கருடன் வைத்த வெற்றித் தூணை நிறுவியுள்ளார். எதிரிகளுக்கு எமன் போன்றவரான வித்யன், ஒரு போரில் பதின்மூன்று படைத் தளபதிகளைக் கொன்று, "பதுமூவரகண்டா" என்னும் பட்டம் பெற்றவர்.

நெல்லூர்ச் சோழர் பட்டியல் :

மதுராந்தக பொத்தப்பிச் சோழன்

விச்சயன்  எனப்படும் தெலுங்கு வித்யன்
முதலாம் மனும சித்தா - கி.பி 1175-1192

மனும சித்தாவின் தம்பி பெத்தாவின் மகன்கள் தயபீமா மற்றும் புஜபல வீர நல்ல சித்தன்ன தேவ  சோழ மஹாராஜா - கி.பி 1187-1214 -இவர்களே காஞ்சியை நேரடிச் சோழர்களிடமிருந்து  வென்றவர்கள். இவர்களின் கால கட்டத்திலிருந்தே நெல்லூர்ச் சோழர்களின் ஆட்சி காஞ்சியில் ஆரம்பித்தது.

பெத்தாவின் இளைய மகன் ஏற சித்தன்ன தேவ சோழ மஹாராஜா - கி.பி 1195-1217

ஏற சித்தன்ன தேவாவின் மகன் இரண்டாம் மனும சித்தா என்கிற வீர நல்ல சித்தர தேவ சோழ மஹாராஜா - கி.பி 1189-1210
  
இரண்டாம் மனும சித்தா வின் தம்பி தம்முசித்தா - கி.பி 1205-1209

இரண்டாம் மனும சித்தா வின் மகன் முதலாம் திக்கா (எ)  திருக்காளத்தி தேவ சோழ மஹாராஜா - கி.பி. 1209-1248

முதலாம் திக்காவின் மருமகன் அல்லு திக்கா  - கி.பி. 1248-1272 - காஞ்சியை தனியாக ஆட்சி செய்தவர்

முதலாம் திக்காவின் மகன்  மூன்றாம் மனும சித்தா (எ) புஜபல வீர மனும சித்தய்ய தேவ சோழ மஹாராஜா  - கி.பி. 1248-1268

முதலாம் திக்காவின் மற்றொரு மகன் விஜய கண்ட கோபாலன் 

மூன்றாம் மனும சித்தாவின் மகன் இரண்டாம் திக்கா (எ) திருக்காளத்தி தேவ சோழ மஹாராஜா - கி.பி. 1265-1281

இரண்டாம் திக்காவின்  சகோதரன் மனும கண்ட கோபால தேவ சோழ மஹாராஜா - கி.பி 1231-1299

வீர கண்ட கோபால தேவ சோழ மஹாராஜா - கி.பி 1292-1316 - காஞ்சியை தனியாக ஆட்சி செய்தவர்

ராஜகண்ட கோபால (எ) ரங்கநாத தேவ சோழ மஹாராஜா - கி.பி. 1299-1325

காஞ்சிச் சோழர் (உத்தேசமானப் பட்டியல்) :   

மானவீர சோழ மஹாராஜா (வீர கண்ட கோபால தேவ சோழ மஹாராஜா?) - கி. பி. 14-ம் நூற்றாண்டு

மானவிஜய சோழ மஹாராஜா - கி. பி. 14-ம் நூற்றாண்டு

குருநாத தேவ சோழ மஹாராஜா - கி. பி. 15-ம் நூற்றாண்டு
   
கொண்டைய தேவ சோழ மஹாராஜா - கி. பி. 16-ம் நூற்றாண்டு

சாளக்கிய தேவ சோழ மஹாராஜா - கி. பி. 16-ம் நூற்றாண்டு

பெரிய திருமலை தேவ சோழ மஹாராஜா - கி. பி. 16-ம் நூற்றாண்டு

சின்ன திருமலை தேவ சோழ மஹாராஜா -  கி. பி. 16-ம் நூற்றாண்டு
   
வீராதி வீரன் வீர சங்குடையான் சோழ ராஜா - கி.பி. 17-18-ஆம் நூற்றாண்டு
   
பெரிய சோழனார் - கி.பி. 18-ஆம் நூற்றாண்டு

சின்ன சோழனார் - கி.பி. 18-ஆம் நூற்றாண்டு 

அலங்கார ராயன் என்கிற வீர விக்ரம சோழன் -  கி.பி. 18-ஆம் நூற்றாண்டு  
    
கலிராஜேந்திர சோழன் - கி.பி. 18-ஆம் நூற்றாண்டு

#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 6
#காஞ்சிச்சோழர்    

Sunday, 2 June 2019

மூன்றாம் இராஜேந்திர சோழனுக்குப் பிந்தைய சோழர் #5

காஞ்சி 

தொண்டை நாடு சோழர்களுடன் மிக நெருங்கியத் தொடர்புடையது. கரிகாலன் அருவா நாட்டை (தொண்டை நாட்டை)க் கைப்பற்றி,  அங்கு நாடோடியாகத் திரிந்த குறும்பரை அடக்கி, அருவாளரை வென்று தொண்டை நாட்டு 24 கோட்டங்களிலும் அவர்களை நிலை பெறச் செய்தார்.

காஞ்சி நகரத்தைக் கரிகாலன் புதுப்பித்தார். தொண்டை மண்டலத்தைக் காடு கெடுத்து நாடாக்கினார் என்று கலிங்கத்துப் பரணி, பெரிய புராணம் முதலிய நூல்கள் கூறுகின்றன. கரிகாலன் தொண்டை நாட்டைத் திருத்தி, காடுகளை வெட்டி மக்கள் உறைதற்கேற்ற சிற்றூர்கள் ஆக்கினார். அவர்கள் பயிரிடுதற்கேற்ற விளை நிலங்கள் ஆக்கினார். தொண்டை நாட்டை 24 கோட்டங்கள் ஆக்கினார். தொண்டை மண்டலத்தின் தலை நகரம் காஞ்சிபுரத்தை மதிலால் வளைப்பித்துச் சிறப்பித்தார். அங்குப் பலரைக் குடியேற்றினார். தொண்டை நாட்டை ஆண்டு வருமாறு தன் மரபினன் ஒருவனை விட்டுத் தன் நாடு மீண்டார் என இராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார். 

பிற்காலத்தில் பல்லவர்கள் எழுச்சியின் போது தொண்டை நாடு பல்லவர் வசமாயிற்று. ஆதித்த சோழன் கால கட்டத்திலிருந்து தொண்டை நாடு மீண்டும் சோழர் வசமாயிற்று. தொண்டை நாடு பெரும்பாலும் சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தாலும், அது தனி நாடாகவேக் கருதப்பட்டு சோழர்களின் பிரதிநிதிகளால் ஆளப்பட்டு வந்துள்ளது.  தொண்டை நாட்டைத் தனியாக, ஆதித்த கரிகாலன் உள்ளிட்ட சோழ இளவரசர்கள் நிர்வகித்துள்ளனர். முதலாம் இராஜேந்திரன் காலம் முதல் அதி ராஜேந்திரன் காலம் முடிய சோழ இளவரசர்கள் தொண்டை நாட்டை சோழ பல்லவன் என்னும் பெயரில் ஆட்சி செய்துள்ளனர்.

முதலாம் குலோத்துங்கன் முதலான சோழப் பேரரசின் நிலையை நீலகண்ட சாஸ்திரிகள் பின் வருமாறுக் குறிப்பிடுகிறார்.  "முதலாம் குலோத்துங்கனின் ஆட்சி முதல், கப்பம் கட்டுகிற சிற்றரசர்களின் எண்ணிக்கையும், மத்திய அரசில் அவர்களுக்கு இருந்த செல்வாக்கும், சோழர் ஆட்சியின் சிறப்புமிகு இயல்புகளாகத் தெரிகின்றன. அரசருடைய பிரதிநிதிகளாயிருந்து, இவர்கள் அதிகாரம் செலுத்தியதால், மத்திய ஆட்சியின் பலம் குறைந்து, அதனுடைய நேரடி நிர்வாகத்திலிருந்து பல பகுதிகள் விலகி நின்றன. அவை ஏறத்தாழ தங்கள் பகுதிகளில் தன்னுரிமையோடு விளங்கின. சிற்றரசர்கள் தங்களுக்குள் உடன்பாடுகளை செய்து கொண்டார்கள். சோழப் பேரரசின் முடிவு காலம் நெருங்கிவிட்டது என்பதற்கு உறுதியான சான்று என்று இதைக் கொள்ளலாம். சிற்றரசர்கள், எந்தக் கொள்கையும் இல்லாமல், தங்கள் தங்கள் சுய நலன்களுக்கு ஏற்றவாறு, சந்தர்ப்பத்திற்குத் தக்கபடி நடந்து கொண்டனர். சோழப் பேரரசு என்ற நினைவு சிதைந்தது. மத்திய அரசில் திறமை இல்லாதவர்களின் கைக்கு நிர்வாகம் மாறும் போது பேரரசு சிதைந்து விடும் நிலை இருந்தது. ஆனால், மூன்றாம் குலோத்துங்கன் அப்படிப்பட்ட வல்லமை இழந்த அரசனல்லன். எவ்வளவோ தொல்லைகள் இருந்தாலும், நாட்டின் ஒற்றுமையையும், தன்னுடைய அதிகாரத்தையும் நிலை நாட்டுவதில் அவன் வெற்றி கொண்டான். காஞ்சிபுரம் இவனுடைய ஆட்சியில் சில ஆண்டுகளுக்கு இவன் கையை விட்டு நழுவியது. அந்த நகரை மீண்டும் கைப்பற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. வருங்காலத்தில் நிகழக் கூடிய செயல்களுக்கு இவை தெளிவான அறிகுறிகளாக விளங்கின."

முதலாம் இராஜராஜன் காலத்தில், தெலுங்குச் சோழரான ஜடா சோடவீமன் சாளுக்கிய மன்னன் சக்திவர்மனை வென்று அவனைக் காஞ்சி வரையில் துரத்தி வந்தான். இராஜராஜன், ஜடா சோடவீமனைப் போரில் கொன்று வேங்கி நாட்டை சக்தி வர்மனுக்குத் திருப்பி அளித்தார். இந்தக் கால கட்டத்துக்குப் பிறகு மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில், நெல்லூர்ச் சோழரான நல்ல சித்தா என்கிற புஜபல வீர நல்ல சித்தன்ன தேவ  சோழ மஹாராஜாவால் காஞ்சி வெல்லப் பட்டது. மூன்றாம் குலோத்துங்கன் காஞ்சியைக் கைப்பற்றி, நெல்லூர்ச் சோழரை மீண்டும் நேரடிச் சோழர்க்கு அடங்கிய சிற்றரசனாக மாற்றினார். இந்தக் கால கட்டம் முதல் நெல்லூர்ச் சோழர், காஞ்சியில் நிரந்தரமாகத் தங்கள் ஆட்சியைத் தொடர்ந்துள்ளனர்.  சோழருக்குப் பின், பாண்டியர், காகதீயர் போன்றோரால் காஞ்சி வெல்லப் பட்டாலும், நெல்லூர்ச் சோழர்கள் தொடர்ந்துப் பேரரசுகளின் மேலாதிக்கத்தை ஏற்றும் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் தன்னிச்சையாகவும் காஞ்சியில் ஆட்சியைத் தொடர்ந்துள்ளனர்.  


#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 5   
#தெலுங்குச்சோழர் 
#காஞ்சிச்சோழர்