Sunday, 9 June 2019

மூன்றாம் இராஜேந்திர சோழனுக்குப் பிந்தைய சோழர் #6


காஞ்சிச் சோழர்  

மூன்றாம் இராஜேந்திர சோழனுடன் முடிவடைந்த நேரடிச் சோழர்களின் ஆட்சிக்குப் பின்பு, கி.பி. 14-15ம் நூற்றாண்டில்,  உறையூர்ச் சோழரின் ஆட்சித் தொடங்கும் வரையில், தமிழகத்தில் சோழர் என்றால், அது காஞ்சிச் சோழர்களைக் குறிப்பதாகவே இருந்தது. கி.பி. 1312-ல், காஞ்சிச் சோழரை வென்ற கேரள மன்னன் பாஸ்கர ரவிவர்மன், தன்னை சோழ நாட்டுப் பேரரசன் என்றும் திரிபுவனச் சக்கரவர்த்திகள் என்றும் கூறிக் கொள்கிறான். 

கி.பி. 12-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து கி.பி 14-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, நெல்லூர்ச் சோழர் காஞ்சியையும் ஒரு தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். கேரள மன்னன் பாஸ்கர ரவிவர்மன் காஞ்சிச் சோழரை வென்றதைப் போல, பாண்டியர்களும் அதே கால கட்டத்தில்  காஞ்சிச்சோழரான வீர கண்ட கோபாலனை வென்றதாகக் குறிப்பிடுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து காகதீயர்களின் தளபதி முப்பிடி நாயக்கர் படையெடுத்து வந்து பாஸ்கர ரவிவர்மனையும், பாண்டியரையும் வென்று காஞ்சியைக் கைப்பற்றி, மான வீர சோழமஹாராஜாவை ஆட்சியாளராக நியமித்தார். இதற்கு முன்னரும் பாண்டியர், நெல்லூர்ச் சோழரை வென்று காஞ்சியைக் கைப்பற்றிய போது, காகதீயர்கள் நெல்லூர்ச் சோழருக்குத் துணையாக வந்து காஞ்சியை மீட்டு மீண்டும் நெல்லூர்ச் சோழரை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். இதனை வைத்துப் பார்க்கும் போது, பாண்டியரால் தோற்கடிக்கப் பட்ட வீரகண்ட கோபாலனும், காகதீயர்களால் காஞ்சியின் ஆட்சியாளராக நியமிக்கப் பட்ட மானவீராவும் ஒருவராகவே இருக்கலாம். 

தெலுங்குச் சோழர்களில், மிகவும் வலிமை வாய்ந்த வம்சம் நெல்லூர்ச் சோழ வம்சம். இவர்களின் ஆட்சி, கிட்டத்தட்ட இரண்டரை நூற்றாண்டுகள் (கி.பி  1100-1350) நீடித்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்கள் ஆரம்ப கால கட்டங்களில் நேரடிச் சோழர்களுக்கும், பின்னர் காகதீயர்களுக்கும் அடங்கிய சிற்றரசர்களாக இருந்துள்ளனர். வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் தனியாட்சியும் புரிந்துள்ளனர். கி.பி. 13-ம் நூற்றாண்டு காலகட்டத்தில், தென்னிந்தியாவில் மிக முக்கிய சக்தியாக இவர்கள் இருந்துள்ளனர். 

நெல்லூர்ச் சோழ வம்சம் சங்ககால கரிகால சோழனின் வழி வந்தவர்கள். இந்த வம்சத்தில் முதலில் குறிப்பிடத் தக்கவர் மதுராந்தக பொத்தப்பிச் சோழன். இவர் மதுரையை வென்றதாகவும், பொத்தப்பி என்ற ஊரை உருவாக்கியதாகவும், இந்த காரணங்களால் இவர் இப்பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இவருக்கு அடுத்து குறிப்பிடத்தக்க மற்றோர் அரசன் விச்சயன்  எனப்படும் தெலுங்கு வித்யன். இவர் உஜ்ஜபுரி என்னுமிடத்தில் உச்சியில் கருடன் வைத்த வெற்றித் தூணை நிறுவியுள்ளார். எதிரிகளுக்கு எமன் போன்றவரான வித்யன், ஒரு போரில் பதின்மூன்று படைத் தளபதிகளைக் கொன்று, "பதுமூவரகண்டா" என்னும் பட்டம் பெற்றவர்.

நெல்லூர்ச் சோழர் பட்டியல் :

மதுராந்தக பொத்தப்பிச் சோழன்

விச்சயன்  எனப்படும் தெலுங்கு வித்யன்
முதலாம் மனும சித்தா - கி.பி 1175-1192

மனும சித்தாவின் தம்பி பெத்தாவின் மகன்கள் தயபீமா மற்றும் புஜபல வீர நல்ல சித்தன்ன தேவ  சோழ மஹாராஜா - கி.பி 1187-1214 -இவர்களே காஞ்சியை நேரடிச் சோழர்களிடமிருந்து  வென்றவர்கள். இவர்களின் கால கட்டத்திலிருந்தே நெல்லூர்ச் சோழர்களின் ஆட்சி காஞ்சியில் ஆரம்பித்தது.

பெத்தாவின் இளைய மகன் ஏற சித்தன்ன தேவ சோழ மஹாராஜா - கி.பி 1195-1217

ஏற சித்தன்ன தேவாவின் மகன் இரண்டாம் மனும சித்தா என்கிற வீர நல்ல சித்தர தேவ சோழ மஹாராஜா - கி.பி 1189-1210
  
இரண்டாம் மனும சித்தா வின் தம்பி தம்முசித்தா - கி.பி 1205-1209

இரண்டாம் மனும சித்தா வின் மகன் முதலாம் திக்கா (எ)  திருக்காளத்தி தேவ சோழ மஹாராஜா - கி.பி. 1209-1248

முதலாம் திக்காவின் மருமகன் அல்லு திக்கா  - கி.பி. 1248-1272 - காஞ்சியை தனியாக ஆட்சி செய்தவர்

முதலாம் திக்காவின் மகன்  மூன்றாம் மனும சித்தா (எ) புஜபல வீர மனும சித்தய்ய தேவ சோழ மஹாராஜா  - கி.பி. 1248-1268

முதலாம் திக்காவின் மற்றொரு மகன் விஜய கண்ட கோபாலன் 

மூன்றாம் மனும சித்தாவின் மகன் இரண்டாம் திக்கா (எ) திருக்காளத்தி தேவ சோழ மஹாராஜா - கி.பி. 1265-1281

இரண்டாம் திக்காவின்  சகோதரன் மனும கண்ட கோபால தேவ சோழ மஹாராஜா - கி.பி 1231-1299

வீர கண்ட கோபால தேவ சோழ மஹாராஜா - கி.பி 1292-1316 - காஞ்சியை தனியாக ஆட்சி செய்தவர்

ராஜகண்ட கோபால (எ) ரங்கநாத தேவ சோழ மஹாராஜா - கி.பி. 1299-1325

காஞ்சிச் சோழர் (உத்தேசமானப் பட்டியல்) :   

மானவீர சோழ மஹாராஜா (வீர கண்ட கோபால தேவ சோழ மஹாராஜா?) - கி. பி. 14-ம் நூற்றாண்டு

மானவிஜய சோழ மஹாராஜா - கி. பி. 14-ம் நூற்றாண்டு

குருநாத தேவ சோழ மஹாராஜா - கி. பி. 15-ம் நூற்றாண்டு
   
கொண்டைய தேவ சோழ மஹாராஜா - கி. பி. 16-ம் நூற்றாண்டு

சாளக்கிய தேவ சோழ மஹாராஜா - கி. பி. 16-ம் நூற்றாண்டு

பெரிய திருமலை தேவ சோழ மஹாராஜா - கி. பி. 16-ம் நூற்றாண்டு

சின்ன திருமலை தேவ சோழ மஹாராஜா -  கி. பி. 16-ம் நூற்றாண்டு
   
வீராதி வீரன் வீர சங்குடையான் சோழ ராஜா - கி.பி. 17-18-ஆம் நூற்றாண்டு
   
பெரிய சோழனார் - கி.பி. 18-ஆம் நூற்றாண்டு

சின்ன சோழனார் - கி.பி. 18-ஆம் நூற்றாண்டு 

அலங்கார ராயன் என்கிற வீர விக்ரம சோழன் -  கி.பி. 18-ஆம் நூற்றாண்டு  
    
கலிராஜேந்திர சோழன் - கி.பி. 18-ஆம் நூற்றாண்டு

#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 6
#காஞ்சிச்சோழர்    

No comments:

Post a Comment