Saturday, 10 August 2019

மூன்றாம் இராஜேந்திர சோழனுக்குப் பிந்தைய சோழர் #10

விஜய கண்ட கோபாலன் 

சோழரா அல்லது பல்லவரா என்று வரலாற்று ஆய்வாளர்களையும் குழப்பக் கூடிய பெயர் விஜய கண்ட கோபாலன். ஒரே பெயருடன், சம காலத்தில், அருகாமைப் பகுதிகளை ஆட்சி செய்தவர்களாக அறியப் படுகிறார்கள் விஜய கண்ட கோபாலன் என்னும் பெயருடைய நெல்லூர்ச் சோழரும், தெலுங்குப் பல்லவரும். கிடைத்திருக்கும் குறிப்புகளைக் கொண்டு இருவரையும் கீழ்க் கண்டவாறு பிரித்தறியலாம்.

தெலுங்குப் பல்லவர் விஜய கண்ட கோபாலன் 
  
இவர் தெலுங்குப் பல்லவரான வீர கண்ட கோபாலனின் தம்பி.
இவரது ஆட்சிக்காலம் கி.பி. 1250 - லிருந்து 1285 வரையிலான 35 ஆண்டுகள்.
பரமவம்சோத்பவர். 
பரத்வாஜ கோத்திரத்தை சேர்ந்தவர்.
மஹாமண்டலேஸ்வரராக இருந்தவர்.

நெல்லூர்ச் சோழர் விஜயகண்ட கோபாலன் 

இவர் நெல்லூர்ச் சோழரான முதலாம் திக்கனின் மகன். மூன்றாம் மனும சித்தாவின் சகோதரன்.
இவரது ஆட்சிக்காலம் கி.பி. 1250 - லிருந்து 1291 வரையிலான 41 ஆண்டுகள்.
கரிகால சோழ வம்சம்.
காஸ்யப கோத்திரத்தை சேர்ந்தவர்.
சுதந்திர மன்னர். தன் ஆட்சியாண்டைக் குறிப்பிட்டு கல்வெட்டுகளை வெளியிட்டவர். 
மதுராந்தக பொத்தப்பிச் சோழன் என்றும், திரிபுவனச் சக்கரவர்த்திகள் என்றும் அழைக்கப் பட்டவர். 

தெலுங்குப் பல்லவரான விஜய கண்ட கோபாலனின்  கல்வெட்டுகளாக, 20 கல்வெட்டுகளைத் தன்னுடைய நூலான "The History of Andhra Country 1000 AD - 1500 AD"-ல் குறிப்பிடுகிறார் திருமதி யசோதா தேவி அவர்கள்.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் வெளியிடப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுக்கள் தொகுதி 1-ல் 8 கல்வெட்டுக்களும், தொகுதி 2-ல் 26 கல்வெட்டுக்களும் விஜய கண்ட கோபாலனின் கல்வெட்டுக்கள். இவை பெரும்பாலும் நெல்லூர்ச் சோழரான விஜய கண்ட கோபாலனுடையதாகவே இருக்க வேண்டும்.

நெல்லூர்ச் சோழ வம்சத்தினர், ஒரே காலகட்டத்தில் இரண்டு அல்லது மூன்று அரசர்கள் நெல்லூர், காஞ்சிபுரம், திருக்காளத்தி உள்ளிட்ட பகுதிகளை ஆட்சி செய்துள்ளனர். முதலாம் திக்கனின் ஆட்சிக்குப் பின்னர் அவரது மகன்கள் மனும சித்தா, விஜயகண்ட கோபாலன் மற்றும் அவரது மருமகன் அல்லுந்திக்கா உள்ளிட்ட மூவர் ஆட்சி செய்துள்ளனர். முதலாம் திக்கனின் மறைவுக்குப் பின்னர், நெல்லூரை அவரது தாயாதிகள் கைப்பற்றினர். நெல்லூரைத் தனது தாயாதிகளிடமிருந்து மீட்க, காகதீயர்களின் உதவியை நாடினார் திக்கனின் மகன் மனும சித்தா. காகதீயர்களின் துணையுடன், மனும சித்தாவும் அவரது சகோதரன் விஜய கண்ட கோபாலனும் மிகக் கடுமையாகப் போர் புரிந்து நெல்லூரை மீட்டனர். இந்த நெல்லூர்ப் போர், மகா பாரதப் போருக்கு இணையாகப் பேசப் பட்டுள்ளது. 

இந்த வெற்றிக்குப் பின்னர், நெல்லூரைத் தலைமையிடமாகக் கொண்டு மனும சித்தா ஆட்சி புரிந்துள்ளார். திக்காவின் மருமகன் அல்லுந்திக்கா, காஞ்சியைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்ததாக யசோதா தேவி அவர்கள் குறிப்பிடுகின்றார். அல்லுந்திக்காவின் ஒரு சில கல்வெட்டுக்களே காஞ்சியில் கிடைக்கின்றன. மாறாக, விஜயகண்ட கோபாலனின் கல்வெட்டுகள் அவரது 2-ம் ஆட்சியாண்டு முதல் 41-ம் ஆட்சியாண்டு வரையில் காஞ்சியில் கிடைக்கின்றன. கல்வெட்டுகளின் செறிவை வைத்துப் பார்க்கும் போது, விஜயகண்ட கோபாலனே காஞ்சியில் ஆட்சி செய்திருப்பதை அறிய முடிகின்றது. அல்லுந்திக்கா, நெல்லூருக்கும் காஞ்சிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஆட்சி செய்திருக்க வேண்டும். குறிப்பாக திருக்காளத்தியைத் தலை நகரகாகக் கொண்டு ஆட்சி செய்திருக்கலாம். 

காஞ்சியை ஆட்சி செய்த விஜயகண்ட கோபாலன், நெல்லூர்ச் சோழர் என்பதை வலுப்படுத்தும் காரணிகள்:

1. நெல்லூர்ச் சோழர் விஜய கண்ட கோபாலனின் ஆட்சிக்காலம் கி.பி. 1250 - லிருந்து 1291 வரையிலான 41 ஆண்டுகள். விஜய கண்ட கோபாலனின் ஆட்சிக்கு முன்னர், காஞ்சிபுரம் அவரது தந்தை சோழ ஸ்தாபனாச்சார்யா எனப்படும் முதலாம் திக்கனின் கட்டுப்பாட்டில் இருந்தது.

2. விஜய கண்ட கோபாலனின் ஆட்சிக்குப் பின்னர் கி.பி. 1291 முதல் அவரது மகன் வீர கண்ட கோபாலனின் ஆட்சியில் காஞ்சிபுரம் இருந்தது.

3. வீர ராஜேந்திர சோழரின் (மூன்றாம் இராஜேந்திரன்) 18-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று (கி.பி. 1264), கண்ட கோபால திருக்காளத்தி தேவரின் (முதலாம் திக்கன்) மகன் விஜய கண்ட கோபாலன் என்பவரைக் குறிப்பிடுகிறது.

4. உறையூர் புரவராதீஸ்வரர் என தெலுங்குச் சோழர்கள் தங்களை அழைத்துக் கொண்டது போல, காஞ்சி புரவராதீஸ்வரர் எனத் தெலுங்குப் பல்லவர் தங்களை அழைத்துக் கொண்டுள்ளனர். இது அவர்களது தொன்மையையும், நேரடி வம்சத்துடன் அவர்களுக்குள்ள தொடர்பைக் காட்டுவதாகவே அமைந்துள்ளதேத் தவிர அவர்கள் அந்த கால கட்டத்தில் காஞ்சியை ஆட்சி செய்தார்கள் என்னும் பொருளில் வரவில்லை. 

5. மதுராந்தக பொத்தப்பி சோழன் என்னும் பெயரை நெல்லூர்ச் சோழர் இரண்டாவது குடிப் பெயர் போன்றே பயன்படுத்தியுள்ளனர். விஜய கண்ட கோபாலனும் மதுராந்தகப் பொத்தப்பிச் சோழன் என்று குறிப்பிடப் பட்டுள்ளார்.

6. மூன்றாம் மனும சித்தா, தனது எதிரிகளில் முதன்மையானவரான விஜயா (தெலுங்குப் பல்லவர் விஜய கண்ட கோபாலன்) என்னும் அரசனை வென்று அவரது புகழை மங்கச் செய்ததாக திக்கண்ணா குறிப்பிடுகிறார்.   

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, மகாமண்டலேஸ்வரரான தெலுங்குப் பல்லவர் விஜயகண்ட கோபாலன், வலிமை வாய்ந்த நெல்லூர்ச் சோழர் மனும சித்தா, விஜய கண்ட கோபாலன்,அல்லுந்திக்கா ஆகிய மூவர் கூட்டணியையும், அவர்களுக்குத் துணையான காகதீயர்களையும் வென்று காஞ்சியை நெல்லூர்ச் சோழரிடமிருந்து கைப்பற்றி ஆட்சி செய்திருக்க வாய்ப்புகள் குறைவு. எனவே நெல்லூர்ச் சோழரான மதுராந்தக பொத்தப்பிச் சோழன் விஜய கண்ட கோபாலனே  கி.பி. 1250-இலிருந்து கி.பி. 1291 வரையிலான 41 ஆண்டுகள் காஞ்சியை ஆட்சி செய்துள்ளார் என்னும் முடிவுக்கு வரலாம்.

References   

1. The History of Andhra country 1000 AD to 1500 AD - Yashoda Devi
2. காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுக்கள் தொகுதி 1
3. காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுக்கள் தொகுதி 2
4. Annual Report on Epigraphy 1915-1920 - P 151
5. The Pandya Kingdom - K.A. Neelakanda Sasthiri P 168-169
6. A Collection of the Inscription on copper plates and stones in the Nellore District P 231
#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 10
#விஜயகண்டகோபாலன் 
#வீரகண்டகோபாலன் 
#Vijaygandagopalan 
#Viragandagopalan  

மூன்றாம் இராஜேந்திர சோழனுக்குப் பிந்தைய சோழர் #9

சோழ ராச்சியப் பிரதிஷ்ட்டாச்சார்யா

மூன்றாம் இராஜராஜ சோழன் பதவியேற்ற காலகட்டத்தில் சோழநாடு முற்றிலும் எதிரிகளால் சூழப் பட்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் சோழருக்கு அடங்கிய சிற்றரசர்களில்  பெரும்பாலானோர் சோழருக்கு எதிரியாக மாறியிருந்தனர். மூன்றாம் குலோத்துங்கனின் மறைவுக்குப் பின்னர் கி.பி. 1219-ல் பாண்டிய மன்னன் மாறவர்மன்  சுந்தர பாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தான். மூன்றாம் இராஜராஜனை வென்ற சுந்தர பாண்டியன்,  சோழர்களின் ஆயிரத்தளி அரண்மனையில், சோழவளவன் அபிடேக மண்டபத்தில் வீராபிடேகம் செய்து கொண்டான். சோழனின் நிலையறிந்து, சோழனுக்கு உதவிட போசள மன்னன் வீர வல்லாளன் முன் வந்தான். பெரும்படை ஒன்றைத் திரட்டிய வீர வல்லாளன், அதன் செலவிற்காகக் கருணை வரி என்னும் புதிய வரியையும் தன் நாட்டில் விதிதான். தன் மகன் நரசிம்மனைப் பெரும் படையுடன் சோழருக்கு உதவியாக அனுப்பினான். போசளர்கள் தலையீட்டால் பாண்டியன் மூன்றாம் இராஜராஜனிடம் சோழ நாட்டைத் திருப்பி அளித்தான். இந்தப் படையெடுப்பின் போது, போசளப் படை விடுகாதழகிய பெருமாள் என்னும் அதியமானையும், வாணகோவரையனையும், காடவராயனையும் தோற்கடித்தது. இந்த நிகழ்வுக்குப் பிறகு வீர வல்லாளன், ''சோழ ராச்சியப்  பிரதிஷ்ட்டாச்சார்யன்'' மற்றும் ''பாண்டிய கஜகேசரி'' ஆகிய பட்டங்களையும், நரசிம்மன் ''சோழகுல ஏக ரட்சகன்'' என்னும் பட்டத்தையும் பூண்டனர். 

அதன் பின்னர், கி.பி. 1231-ல் மூன்றாம் இராஜராஜன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தார். முதலில் சோழர்களின் தூசிப் படையும் பின்னர் பேரணியும் பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்தன. பாண்டியர்களின் படை சோழரின் தூசிப் படையையும், பேரணியையும் வென்றது. கடுமையாக நடை பெற்ற போரில் சோழர்களுக்கு யானை, குதிரை, காலாட் படைகளில் பெருஞ்சேதம் ஏற்பட்டது. சோழ நாட்டில் இரத்த ஆறு ஓடியது. வெற்றி பெற்ற சுந்தர பாண்டியன், சோழர் தலை நகரான முடி கொண்ட சோழ புரத்தில் விஜயாபிஷேகம் செய்து கொண்டான். ஆனால், சுந்தர பாண்டியனின் இந்த வெற்றி தற்காலிக வெற்றியாக சில மாதங்களே நீடித்தது.

தோல்வியுற்ற இராஜராஜன் துவார சமுத்திரம் நோக்கி செல்வதை அறிந்த காடவராயன் முதலாம் கோப்பெருஞ்சிங்கன், சோழனை சிறை பிடித்து தன்னுடைய தலைநகர் சேந்த மங்கலத்தில் சிறை வைத்தான். ''காடவராயனிடம் காட்டுப் படையும், மிலேச்சப் படையும் இருந்ததால் அவன் வல்லமை பெற்றிருந்தான். அவனுடைய பல தந்திரங்களாலும் சூழ்ச்சிகளாலும் கொடியவனாக இருந்த இந்த எதிரி, தன் தலைநகரான ஜெயந்த மங்கலத்தில் இராஜராஜனை சிறை வைத்தான்'' என்று கத்யகர்ணாமிர்தம் என்னும் கன்னட நூல் குறிப்பிடுகிறது. இந்த செய்தியைக் கேள்வியுற்ற போசள மன்னன் வீரநரசிம்மன், மீண்டும் சோழநாடு சென்று இராஜராஜனை அரியணையில் அமர்த்தி ''சோழ மண்டல பிரதிஷ்ட்டாச்சாரியன்'' என்னும் பட்டத்தைப் பெற்றுத் திரும்பும் வரை தன் வெற்றி முரசு ஒலிக்காது என்று வஞ்சினம் கூறித் தமிழகம் வந்தான். பாண்டியர்களின் நண்பனான மகத நாட்டு வாணகோவரையனை வென்ற நரசிம்மன், ஸ்ரீரங்கத்துக்கு அருகில் உள்ள பாச்சூரில் ஒரு படையுடன் நிலை கொண்டு, தன் தளபதிகள் அப்பண்ணா மற்றும் சமுத்திர கொப்பையனைக் கோப்பெருஞ்சிங்கனின் நாட்டுக்கு அனுப்பினான். போசளப் படை கோப்பெருஞ்சிங்கன் இருந்த எள்ளேரியையும், கல்லியூர் மூலையையும் (வீராணம் ஏரிக்கரையில் உள்ள கலியமலை), கோப்பெருஞ்சிங்கனின் படைமுதலி  சோழகோன் இருந்த தொழுதகையூரையும் கைப்பற்றியது. கோப்பெருஞ்சிங்கனின் படை முதலிகள் 4 பேரையும் கொன்று கொல்லி சோழகோன் குதிரைகளையும் கைக்கொண்டு கோப்பெருஞ்சிங்கனின் தலைநகர் சேந்தமங்கலம் அடைந்து இராஜராஜனை விடுவித்தது. 

போசளப் படை இராஜராஜனை விடுவித்த அதே சமயத்தில், நரசிம்மன் சுந்தரபாண்டியனுடன் மகேந்திரமங்கலத்தில் போரில் ஈடுபட்டிருந்தான். சுந்தர பாண்டியன் போரில் தோல்வியுற்றான்.நரசிம்மன் இராமேஸ்வரம் வரை சென்று மீண்டான். சுந்தர பாண்டியன் நரசிம்மனுக்கு கப்பம் காட்டுவதாக ஒத்துக் கொண்டான் என்று ஹொய்சாளர் கல்வெட்டு கூறுகிறது.

இதன் பின்னர் சோழப்பேரரசு, கி.பி. 1238-க்கும் 1250-க்கும் இடையே சில ஆண்டுகள், தங்கள் எதிரிகளையும் சிற்றரசர்களையும் பொருட்படுத்தாமல் மீண்டும் தலை தூக்கிற்று. நெல்லூரை ஆண்ட தெலுங்குச் சோழ மன்னர்களின் ஒத்துழைப்புதான் இதற்குப் பெரிதும் காரணமாக இருந்தது என்று நீலகண்ட சாஸ்திரிகள் குறிப்பிடுகிறார்.  

Refernces 

சோழர் வரலாறு - இராசமாணிக்கனார் 
பிற்காலச் சோழர் வரலாறு - சதாசிவ பண்டாரத்தார் 
சோழர்கள் - K A நீலகண்ட சாஸ்திரிகள்   
தமிழ்நாட்டு வரலாறு - சோழப் பெரு வேந்தர் காலம் - முதல் தொகுதி

#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 9
#சோழராச்சியப்பிரதிஷ்ட்டாச்சார்யா
#பாண்டியகஜகேசரி
#சோழகுலஏகரட்சகன்
#சோழமண்டலப்பிரதிஷ்ட்டாச்சாரியன்

Saturday, 20 July 2019

மூன்றாம் இராஜேந்திர சோழனுக்குப் பிந்தைய சோழர் #8

சோழஸ்தாபனாச்சார்யா 

தெலுங்குச் சோழர்களில் மிகச்சிறந்த அரசன் முதலாம் திக்கன் என்கிற திருக்காளத்தி தேவ சோழ மஹாராஜா. இவர் இரண்டாம் மனும சித்தாவின் மகன். இவர் தம்மு சித்தாவிற்குப் பின் ஆட்சிக்கு வந்தவர். இவருடைய கல்வெட்டுகள் காஞ்சி, தென் ஆற்காடு, மணிமங்கலம் ஆகிய இடங்கள் வரை கிடைக்கின்றன. இதைக்கொண்டு நெல்லூர், தெற்கில் செங்கல்பட்டு, வடக்கில் கடப்பா வரை இவரது ஆட்சி பரந்து விரிந்திருந்ததை அறியலாம். சம்புவராயர், சேதியராயர், காடவராயர்களை வென்று தன் பேரரசை ஒப்புக்கொள்ளச் செய்தவர்.  இவ்வெற்றியால் கோப்பெருஞ் சிங்கன் சூழ்ச்சிகளை ஒடுக்கினவர். இவர் தொண்டை மண்டலத்தில் பெரும் பகுதியைச் சோழப் பேரரசிற்கு அடங்கியே ஆண்டு வந்தார்.  இருப்பினும் இவரது ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்தில் சோழர்களின் பலம் முற்றிலும் குன்றவில்லையாதலால், சோழர்களின் சிற்றரசாகவே இவர் இருந்தார். மூன்றாம் ராஜராஜ சோழனின் கல்வெட்டுகளில் கண்டகோபாலன் என்ற பெயரில் இவரும் இவரது மனைவிகளும் இடம்பெறுகின்றனர். இவர் கி.பி. 1209-லிருந்து கி.பி. 1248 வரை கிட்டத்தட்ட 40 ஆண்டுக்காலம் ஆட்சிசெய்தார். திக்கன், கர்நாடக சோமேஸ்வரனையும், சம்புராஜுவையும் மற்ற சோழகுல எதிரிகளையும் தோற்கடித்து, நேரடிச் சோழரின் ஆட்சியை நிலை நிறுத்தி ‘சோழஸ்தாபனாச்சார்யா’ என்ற பட்டம் பெற்றவர்.

''மதுராந்தப் பொத்தப்பிச் சோழ மனுமசித்தரசன் திருக்காளத்தி தேவன் எனும் கண்டகோபாலன்'' என்று காஞ்சிபுரம் கல்வெட்டுகளில் திக்கன் குறிப்பிடப் படுகிறார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்ட காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுத் தொகுதிகள் 2-ல் மட்டும், திக்கனின் கல்வெட்டுகள் 30 உள்ளன. 

வேலணாடு சோழர் அழிப்பு 

திக்கண்ண சோமயாஜி எனும் தெலுங்கு கவிஞர், முதலாம் திக்கனின் மகன் மனுமசித்தியின் அரசவைக் கவியும் அமைச்சருமாவார். பழங்காலத் தெலுங்குக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர். தெலுங்கில் மகாபாரதக் கதையை எழுதிய மூவருள் இரண்டாமவர். மகாபாரதம் எழுதும் முன்னர் சோமவேள்வியை நடத்தியவராதலால் சோமயாஜி என அழைக்கப்பட்டார். திக்கண்ண சோமயாஜி எழுதிய ''நிர்வாசனோத்தவ ராமாயணமு'' என்ற நூலின் முன்னுரையில், திக்கனுடைய சாதனையைப் பற்றி விரிவாகவும், நடுநிலையிலும் எழுதிப் பல விபரங்களைத் தந்திருக்கிறார்.  கி.பி. 1210-ல் திக்கா வேலணாண்டு சோழருக்கு எதிரானப் போரை நடத்தினார். இந்தப் போரில் வேலணாண்டு சோழரான பிரிதிவீஸ்வரனின் தலையைக் கொய்து  திக்கன்  பந்து விளையாடியதாக திக்கணா குறிப்பிடுகிறார். இது திக்கனின் காஞ்சிபுரம் கல்வெட்டிலும் குறிப்பிடப்படுகிறது. இந்த பிரிதிவீஸ்வரனுடன் வேலணாடு சோழ வம்சம் முதலாம் திக்கனின் கையால் முடிவுக்கு வந்தது. 

சோழ மண்டல பிரதிஷ்ட்டாச்சார்யாவைக் கொன்ற சோழஸ்தாபனாச்சார்யா 

ஹொய்சாள மன்னன் இரண்டாம் நரசிம்மன், மூன்றாம் இராஜராஜனை வென்ற பாண்டியனையும், சோழனை சிறை பிடித்த கோப்பெருஞ்சிங்கனையும் வென்று இராஜராஜனை மீண்டும் சோழ அரியணையில் அமர்த்தி ''சோழ மண்டல பிரதிஷ்ட்டாச்சார்யா'' என்னும் பட்டம் பெற்றவர். இந்த நரசிம்மனுக்கும், திக்கனுக்கும் இடையே அடிக்கடி போர் நிகழ்ந்துள்ளது. கி.பி. 1239-ல் நடைபெற்ற இறுதிப் போரில், திக்கன் நரசிம்மனைக் கொன்றதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, கி.பி. 1240-ல் நரசிம்மனின் மகன் வீர சோமேஸ்வரன் திக்கனுக்கு எதிராகப் படையெடுத்ததை ஹொய்சாளர் கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஆயினும் இந்தப் போரிலும் திக்கனே வெற்றி பெற்று தனது வலிமையை நிலை நாட்டினார்.   

பாண்டியருக்கு எதிரான வெற்றி 

திக்கனின் கால கட்டத்தில் பாண்டியப் பேரரசு, தென்னிந்தியாவின் மிகவும் வலிமை வாய்ந்த சக்தியாக விளங்கியது. முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி 1216-1238) மற்றும் இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி 1238-1253) ஆகியோர் திக்கனின் சம காலத்திய பாண்டிய மன்னர்கள். மூன்றாம் இராஜராஜ சோழன், பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் தோற்கடிக்கப்பட்ட இரு நிகழ்வுகளிலும் ஹொய்சாள மன்னர்கள் வீர வல்லாளன் மற்றும் அவரது மகன் நரசிம்மன் சோழருக்கு உறு துணையாயிருந்து சோழ நாட்டை மீட்டனர். ஆயினும் நரசிம்மனின் மகன் வீர சோமேஸ்வரன் பாண்டியருக்கு ஆதரவான நிலையெடுத்து ''பாண்டிய குல சம்ரக்ஷகன்'' என்னும் பெயர் பெற்றார். பாண்டியரிடம் கடை பிடிக்க வேண்டிய கொள்கை வேறு பட்டதால் சோழருக்கும் ஹொய்சாளருக்கும் இடையே போர் மூண்டது. முதலாம் திக்கன் இப்போரில் சோழனை ஆதரித்தார். சோழருக்கு ஆதரவாக இருந்த ஹொய்சாளர், பாண்டியர் பக்கம் சாய்ந்தபோதும், சோழர்களுக்கு உறுதுணையாக திக்கன் நின்றுள்ளார். இராஜேந்திரன் தன்னிடம் அடைக்கலம் புகுந்தவுடன்  திக்கன் அவரை ஆதரித்ததாகவும், சோமேஸ்வரனைப் போரில் வென்று, சோழ அரசனை மீண்டும் அரசனாக்கி ''சோழ ஸ்தாபனாச்சாரியான்'' என்னும் பெயர் பெற்றதாகவும் திக்கணா குறிப்பிடுகிறார். தெலுங்கில் மொழி பெயர்க்கப் பட்ட தசகுமார சரிதம் என்னும் நூலில் தெலுங்குக் கவி கேதனா, திக்கன் பாண்டியர்களிடமிருந்து கப்பம் வசூலித்ததையும் (1-16) சொல்லுகிறார்.  

நாணயம் 

முதலாம் திக்கன், கண்ட கோபாலன் பழமாடை, கண்ட கோபாலன் புதுமாடை, கண்ட கோபாலன் வாசிபடா புதுமாடை என்ற பெயரில் நாணயங்களை வெளியிட்டார். திக்கன் தீவிர வைணவப் பற்று மிக்கவர் என்பதால், இவர் வெளியிட்டக் காசிலும் சங்கு இடம் பெற்றுள்ளது. திக்கன் வெளியிட்ட கண்டகோபலன் மாடை காசின் முன் பக்கத்தில் மேலே ''கண்ட'' என்று சோழர் கால எழுத்திலும், வேணு கோபாலன் உருவம் தலை கீழாகவும், இவ்வுருவத்துக்கு இரு புறங்களிலும் 'ஸ்ரீ' என்ற தெலுங்கு எழுத்தும் பொறிக்கப் பட்டுள்ளன. 'கண்ட' என்ற வாசகத்தையும், வேணு கோபாலனது உருவத்தையும் இணைத்துப் பார்த்தோமானால் கண்டகோபாலன் என்ற பெயர் தெளிவாகும்.

படம்: நெல்லூர்ச் சோழர் வெளியிட்ட புஜபலன் மாடை இணையத்திலிருந்து  

Refernces 
சோழர்கள் - K A நீலகண்ட சாஸ்திரிகள் 
சோழர் வரலாறு - இராசமாணிக்கனார் 
பிற்காலச் சோழர் வரலாறு - சதாசிவ பண்டாரத்தார் 
The History of Andhra country 1000 AD to 1500
தமிழ்நாட்டு வரலாறு - சோழப் பெரு வேந்தர் காலம் - முதல் தொகுதி 

#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 8   
#காஞ்சிச்சோழர்  
#நெல்லூர்ச்சோழர்

Sunday, 16 June 2019

மூன்றாம் இராஜேந்திர சோழனுக்குப் பிந்தைய சோழர் #7

நெல்லூர்ச் சோழரின் ஆட்சியில் காஞ்சி

நல்லசித்தா என்கிற புஜபல வீர நல்ல சித்தன்ன தேவ  சோழ மஹாராஜா - கி.பி 1187-1214 

நெல்லூர்ச் சோழரின் தொடர்ச்சியான வரலாறு, முதலாம் மனும சித்தா மூலம் கி.பி. 1175-ல் ஆரம்பிக்கின்றது. இவருக்குப் பின், இவரது தம்பி பெத்தாவின் மூன்று மகன்களான தயபீமா, நல்லசித்தா மற்றும் எறசித்தா ஆகியோர் ஆட்சியைத் தொடர்ந்தனர். இதில்  தயபீமா மற்றும் நல்லசித்தா ஆகியோர் இணைந்து ஆட்சி செய்தனர். இவர்களே காஞ்சியை நேரடிச் சோழர்களிடமிருந்து  வென்றவர்கள். இவர்களின் கால கட்டத்திலிருந்தே நெல்லூர்ச் சோழர்களின் ஆட்சி காஞ்சியில் ஆரம்பித்தது. நல்லசித்தா என்கிற புஜபல வீர நல்ல சித்தன்ன தேவ சோழ மஹாராஜா, காஞ்சியில் "கப்பம் கொண்ண" செய்தியை நெல்லூர்க் கல்வெட்டுகள் (G-1, K.V -13) குறிப்பிடுகின்றன. நல்லசித்தாவின் பட்டங்கள், அவன் சுதந்திரமாக ஆட்சி செய்ததற்கு அடையாளமாக விளங்குகின்றன. இரண்டு காலகட்டங்களில் நெல்லூர்ச் சோழர் சுதந்திரமாக செயல் பட்டிருப்பர் என நீலகண்ட சாஸ்திரிகள் குறிப்பிடுகிறார். அவை: 

1) கி.பி. 1183-92, மூன்றாம் குலோத்துங்கன் பாண்டிய நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த காலம். 

2) கி.பி. 1214 முதல், மூன்றாம் குலோத்துங்கனுடைய ஆட்சியின் இறுதிக்காலம் வரை- இது அவன் மீண்டும் பாண்டியருடன் போரிட்ட காலப்பகுதி.


எற சித்தா என்கிற புஜபல வீர  எற சித்தன்ன தேவ  சோழ மஹாராஜா - கி.பி 1195-1217

தயபீமா மற்றும் நல்லசித்தாவைத் தொடர்ந்து அவர்களின் தம்பி  றசித்தா கி.பி. 1195-லிருந்து 22 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். உறையூர் புரவராதீஸ்வரர், காஞ்சி புரவராதீஸ்வரர், காஞ்சிம் கப்பமு தின்னா  என்று அழைக்கப்பட்டவர்.   றசித்தாவின் மூன்று மகன்களான மனுமசித்தா, பெத்தா, தம்முசித்தா ஆகியோர் இவரது மூன்று கண்களைப் போல் இருந்தனர் என்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. மூன்றாம் குலோத்துங்கன் மற்றும் மூன்றாம் இராஜராஜனுக்கு அடங்கிய சிற்றரசராக இவர் ஆட்சி செய்துள்ளார். 

ராஜேந்திர மனும சித்தா (II) என்கிற வீர நல்ல சித்தர தேவ சோழ மஹாராஜா - (கி.பி 1199-1220)   

இவர்  ற சித்தாவின் முதல் மகன். மூன்றாம் குலோத்துங்கனின் 23-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இவரை நல்லசித்தரசன் என்று குறிப்பிடுகிறது. இவர் மூன்றாம் குலோத்துங்கனுக்கு அடங்கிய சிற்றரசராக ஆரம்ப கால கட்டங்களில் ஆட்சி செய்தாலும், இவரது ஆட்சியின் இறுதி கால கல்வெட்டுகள் குலோத்துங்கனைக் குறிப்பிடவில்லை. கி.பி 1214-ம் ஆண்டு கல்வெட்டொன்று, இவரை காஞ்சிம்கப்ப கொண்ணாட்டி என்று குறிப்பிடுகின்றன. இந்தக் காலகட்டத்திலிருந்து மூன்றாம் குலோத்துங்கனின் இறுதி ஆட்சிக் காலம் வரை இவர் தன்னாட்சி செய்திருப்பதாகத் தெரிகிறது. அதாவது மூன்றாம் குலோத்துங்கன் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் எதிர்ப்பைச் சமாளித்துக் கொண்டிருந்த வேளையில், காஞ்சியை மனுமசித்தா தனியாட்சி புரிந்துள்ளார். இதற்கு முன் இவரது பெரிய தந்தை நல்ல சித்தா, கி.பி. 1183-லிருந்து 1192 வரை தன்னாட்சி செய்து, பின்னர் மூன்றாம் குலோத்துங்கனால் அடக்கப் பட்டார். அதனைப் போன்றே மூன்றாம் இராஜராஜன் தலையிட்டு அடக்கும் வரை மனும சித்தா (II) தன்னாட்சி புரிந்துள்ளார். இந்த இரண்டு நிகழ்வுகளைத் தவிர, மூன்றாம் இராஜேந்திரரின் இறுதி ஆட்சிக்காலம் வரை, நெல்லூர்ச் சோழர்கள் நேரடிச் சோழர்களுக்கு உறு துணையாய் இருந்துள்ளனர்.

தம்முசித்தா - கி.பி 1205-1209   

இவர் ராஜேந்திர மனும சித்தா (II) வின் தம்பி. இவர் 5 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்துள்ளார். கி.பி. 1205 -ஆம் ஆண்டைச் சேர்ந்த இவரது ஆரம்ப காலக் கல்வெட்டு, சின்ன காஞ்சிபுரத்திலிருந்து கிடைக்கின்றது. கி.பி. 1208 -ஆம் ஆண்டில், மூன்றாம் குலோத்துங்கனின் வாரங்கல் படையெடுப்பின் போது, இவரும், ஏற சித்தா மற்றும் மனும சித்தா ஆகியோர் குலோத்துங்கன் சார்பாகப் பங்கேற்றிருக்க வேண்டும்.


#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 7   
#காஞ்சிச்சோழர்  

Sunday, 9 June 2019

மூன்றாம் இராஜேந்திர சோழனுக்குப் பிந்தைய சோழர் #6


காஞ்சிச் சோழர்  

மூன்றாம் இராஜேந்திர சோழனுடன் முடிவடைந்த நேரடிச் சோழர்களின் ஆட்சிக்குப் பின்பு, கி.பி. 14-15ம் நூற்றாண்டில்,  உறையூர்ச் சோழரின் ஆட்சித் தொடங்கும் வரையில், தமிழகத்தில் சோழர் என்றால், அது காஞ்சிச் சோழர்களைக் குறிப்பதாகவே இருந்தது. கி.பி. 1312-ல், காஞ்சிச் சோழரை வென்ற கேரள மன்னன் பாஸ்கர ரவிவர்மன், தன்னை சோழ நாட்டுப் பேரரசன் என்றும் திரிபுவனச் சக்கரவர்த்திகள் என்றும் கூறிக் கொள்கிறான். 

கி.பி. 12-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து கி.பி 14-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, நெல்லூர்ச் சோழர் காஞ்சியையும் ஒரு தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். கேரள மன்னன் பாஸ்கர ரவிவர்மன் காஞ்சிச் சோழரை வென்றதைப் போல, பாண்டியர்களும் அதே கால கட்டத்தில்  காஞ்சிச்சோழரான வீர கண்ட கோபாலனை வென்றதாகக் குறிப்பிடுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து காகதீயர்களின் தளபதி முப்பிடி நாயக்கர் படையெடுத்து வந்து பாஸ்கர ரவிவர்மனையும், பாண்டியரையும் வென்று காஞ்சியைக் கைப்பற்றி, மான வீர சோழமஹாராஜாவை ஆட்சியாளராக நியமித்தார். இதற்கு முன்னரும் பாண்டியர், நெல்லூர்ச் சோழரை வென்று காஞ்சியைக் கைப்பற்றிய போது, காகதீயர்கள் நெல்லூர்ச் சோழருக்குத் துணையாக வந்து காஞ்சியை மீட்டு மீண்டும் நெல்லூர்ச் சோழரை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். இதனை வைத்துப் பார்க்கும் போது, பாண்டியரால் தோற்கடிக்கப் பட்ட வீரகண்ட கோபாலனும், காகதீயர்களால் காஞ்சியின் ஆட்சியாளராக நியமிக்கப் பட்ட மானவீராவும் ஒருவராகவே இருக்கலாம். 

தெலுங்குச் சோழர்களில், மிகவும் வலிமை வாய்ந்த வம்சம் நெல்லூர்ச் சோழ வம்சம். இவர்களின் ஆட்சி, கிட்டத்தட்ட இரண்டரை நூற்றாண்டுகள் (கி.பி  1100-1350) நீடித்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்கள் ஆரம்ப கால கட்டங்களில் நேரடிச் சோழர்களுக்கும், பின்னர் காகதீயர்களுக்கும் அடங்கிய சிற்றரசர்களாக இருந்துள்ளனர். வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் தனியாட்சியும் புரிந்துள்ளனர். கி.பி. 13-ம் நூற்றாண்டு காலகட்டத்தில், தென்னிந்தியாவில் மிக முக்கிய சக்தியாக இவர்கள் இருந்துள்ளனர். 

நெல்லூர்ச் சோழ வம்சம் சங்ககால கரிகால சோழனின் வழி வந்தவர்கள். இந்த வம்சத்தில் முதலில் குறிப்பிடத் தக்கவர் மதுராந்தக பொத்தப்பிச் சோழன். இவர் மதுரையை வென்றதாகவும், பொத்தப்பி என்ற ஊரை உருவாக்கியதாகவும், இந்த காரணங்களால் இவர் இப்பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இவருக்கு அடுத்து குறிப்பிடத்தக்க மற்றோர் அரசன் விச்சயன்  எனப்படும் தெலுங்கு வித்யன். இவர் உஜ்ஜபுரி என்னுமிடத்தில் உச்சியில் கருடன் வைத்த வெற்றித் தூணை நிறுவியுள்ளார். எதிரிகளுக்கு எமன் போன்றவரான வித்யன், ஒரு போரில் பதின்மூன்று படைத் தளபதிகளைக் கொன்று, "பதுமூவரகண்டா" என்னும் பட்டம் பெற்றவர்.

நெல்லூர்ச் சோழர் பட்டியல் :

மதுராந்தக பொத்தப்பிச் சோழன்

விச்சயன்  எனப்படும் தெலுங்கு வித்யன்
முதலாம் மனும சித்தா - கி.பி 1175-1192

மனும சித்தாவின் தம்பி பெத்தாவின் மகன்கள் தயபீமா மற்றும் புஜபல வீர நல்ல சித்தன்ன தேவ  சோழ மஹாராஜா - கி.பி 1187-1214 -இவர்களே காஞ்சியை நேரடிச் சோழர்களிடமிருந்து  வென்றவர்கள். இவர்களின் கால கட்டத்திலிருந்தே நெல்லூர்ச் சோழர்களின் ஆட்சி காஞ்சியில் ஆரம்பித்தது.

பெத்தாவின் இளைய மகன் ஏற சித்தன்ன தேவ சோழ மஹாராஜா - கி.பி 1195-1217

ஏற சித்தன்ன தேவாவின் மகன் இரண்டாம் மனும சித்தா என்கிற வீர நல்ல சித்தர தேவ சோழ மஹாராஜா - கி.பி 1189-1210
  
இரண்டாம் மனும சித்தா வின் தம்பி தம்முசித்தா - கி.பி 1205-1209

இரண்டாம் மனும சித்தா வின் மகன் முதலாம் திக்கா (எ)  திருக்காளத்தி தேவ சோழ மஹாராஜா - கி.பி. 1209-1248

முதலாம் திக்காவின் மருமகன் அல்லு திக்கா  - கி.பி. 1248-1272 - காஞ்சியை தனியாக ஆட்சி செய்தவர்

முதலாம் திக்காவின் மகன்  மூன்றாம் மனும சித்தா (எ) புஜபல வீர மனும சித்தய்ய தேவ சோழ மஹாராஜா  - கி.பி. 1248-1268

முதலாம் திக்காவின் மற்றொரு மகன் விஜய கண்ட கோபாலன் 

மூன்றாம் மனும சித்தாவின் மகன் இரண்டாம் திக்கா (எ) திருக்காளத்தி தேவ சோழ மஹாராஜா - கி.பி. 1265-1281

இரண்டாம் திக்காவின்  சகோதரன் மனும கண்ட கோபால தேவ சோழ மஹாராஜா - கி.பி 1231-1299

வீர கண்ட கோபால தேவ சோழ மஹாராஜா - கி.பி 1292-1316 - காஞ்சியை தனியாக ஆட்சி செய்தவர்

ராஜகண்ட கோபால (எ) ரங்கநாத தேவ சோழ மஹாராஜா - கி.பி. 1299-1325

காஞ்சிச் சோழர் (உத்தேசமானப் பட்டியல்) :   

மானவீர சோழ மஹாராஜா (வீர கண்ட கோபால தேவ சோழ மஹாராஜா?) - கி. பி. 14-ம் நூற்றாண்டு

மானவிஜய சோழ மஹாராஜா - கி. பி. 14-ம் நூற்றாண்டு

குருநாத தேவ சோழ மஹாராஜா - கி. பி. 15-ம் நூற்றாண்டு
   
கொண்டைய தேவ சோழ மஹாராஜா - கி. பி. 16-ம் நூற்றாண்டு

சாளக்கிய தேவ சோழ மஹாராஜா - கி. பி. 16-ம் நூற்றாண்டு

பெரிய திருமலை தேவ சோழ மஹாராஜா - கி. பி. 16-ம் நூற்றாண்டு

சின்ன திருமலை தேவ சோழ மஹாராஜா -  கி. பி. 16-ம் நூற்றாண்டு
   
வீராதி வீரன் வீர சங்குடையான் சோழ ராஜா - கி.பி. 17-18-ஆம் நூற்றாண்டு
   
பெரிய சோழனார் - கி.பி. 18-ஆம் நூற்றாண்டு

சின்ன சோழனார் - கி.பி. 18-ஆம் நூற்றாண்டு 

அலங்கார ராயன் என்கிற வீர விக்ரம சோழன் -  கி.பி. 18-ஆம் நூற்றாண்டு  
    
கலிராஜேந்திர சோழன் - கி.பி. 18-ஆம் நூற்றாண்டு

#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 6
#காஞ்சிச்சோழர்    

Sunday, 2 June 2019

மூன்றாம் இராஜேந்திர சோழனுக்குப் பிந்தைய சோழர் #5

காஞ்சி 

தொண்டை நாடு சோழர்களுடன் மிக நெருங்கியத் தொடர்புடையது. கரிகாலன் அருவா நாட்டை (தொண்டை நாட்டை)க் கைப்பற்றி,  அங்கு நாடோடியாகத் திரிந்த குறும்பரை அடக்கி, அருவாளரை வென்று தொண்டை நாட்டு 24 கோட்டங்களிலும் அவர்களை நிலை பெறச் செய்தார்.

காஞ்சி நகரத்தைக் கரிகாலன் புதுப்பித்தார். தொண்டை மண்டலத்தைக் காடு கெடுத்து நாடாக்கினார் என்று கலிங்கத்துப் பரணி, பெரிய புராணம் முதலிய நூல்கள் கூறுகின்றன. கரிகாலன் தொண்டை நாட்டைத் திருத்தி, காடுகளை வெட்டி மக்கள் உறைதற்கேற்ற சிற்றூர்கள் ஆக்கினார். அவர்கள் பயிரிடுதற்கேற்ற விளை நிலங்கள் ஆக்கினார். தொண்டை நாட்டை 24 கோட்டங்கள் ஆக்கினார். தொண்டை மண்டலத்தின் தலை நகரம் காஞ்சிபுரத்தை மதிலால் வளைப்பித்துச் சிறப்பித்தார். அங்குப் பலரைக் குடியேற்றினார். தொண்டை நாட்டை ஆண்டு வருமாறு தன் மரபினன் ஒருவனை விட்டுத் தன் நாடு மீண்டார் என இராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார். 

பிற்காலத்தில் பல்லவர்கள் எழுச்சியின் போது தொண்டை நாடு பல்லவர் வசமாயிற்று. ஆதித்த சோழன் கால கட்டத்திலிருந்து தொண்டை நாடு மீண்டும் சோழர் வசமாயிற்று. தொண்டை நாடு பெரும்பாலும் சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தாலும், அது தனி நாடாகவேக் கருதப்பட்டு சோழர்களின் பிரதிநிதிகளால் ஆளப்பட்டு வந்துள்ளது.  தொண்டை நாட்டைத் தனியாக, ஆதித்த கரிகாலன் உள்ளிட்ட சோழ இளவரசர்கள் நிர்வகித்துள்ளனர். முதலாம் இராஜேந்திரன் காலம் முதல் அதி ராஜேந்திரன் காலம் முடிய சோழ இளவரசர்கள் தொண்டை நாட்டை சோழ பல்லவன் என்னும் பெயரில் ஆட்சி செய்துள்ளனர்.

முதலாம் குலோத்துங்கன் முதலான சோழப் பேரரசின் நிலையை நீலகண்ட சாஸ்திரிகள் பின் வருமாறுக் குறிப்பிடுகிறார்.  "முதலாம் குலோத்துங்கனின் ஆட்சி முதல், கப்பம் கட்டுகிற சிற்றரசர்களின் எண்ணிக்கையும், மத்திய அரசில் அவர்களுக்கு இருந்த செல்வாக்கும், சோழர் ஆட்சியின் சிறப்புமிகு இயல்புகளாகத் தெரிகின்றன. அரசருடைய பிரதிநிதிகளாயிருந்து, இவர்கள் அதிகாரம் செலுத்தியதால், மத்திய ஆட்சியின் பலம் குறைந்து, அதனுடைய நேரடி நிர்வாகத்திலிருந்து பல பகுதிகள் விலகி நின்றன. அவை ஏறத்தாழ தங்கள் பகுதிகளில் தன்னுரிமையோடு விளங்கின. சிற்றரசர்கள் தங்களுக்குள் உடன்பாடுகளை செய்து கொண்டார்கள். சோழப் பேரரசின் முடிவு காலம் நெருங்கிவிட்டது என்பதற்கு உறுதியான சான்று என்று இதைக் கொள்ளலாம். சிற்றரசர்கள், எந்தக் கொள்கையும் இல்லாமல், தங்கள் தங்கள் சுய நலன்களுக்கு ஏற்றவாறு, சந்தர்ப்பத்திற்குத் தக்கபடி நடந்து கொண்டனர். சோழப் பேரரசு என்ற நினைவு சிதைந்தது. மத்திய அரசில் திறமை இல்லாதவர்களின் கைக்கு நிர்வாகம் மாறும் போது பேரரசு சிதைந்து விடும் நிலை இருந்தது. ஆனால், மூன்றாம் குலோத்துங்கன் அப்படிப்பட்ட வல்லமை இழந்த அரசனல்லன். எவ்வளவோ தொல்லைகள் இருந்தாலும், நாட்டின் ஒற்றுமையையும், தன்னுடைய அதிகாரத்தையும் நிலை நாட்டுவதில் அவன் வெற்றி கொண்டான். காஞ்சிபுரம் இவனுடைய ஆட்சியில் சில ஆண்டுகளுக்கு இவன் கையை விட்டு நழுவியது. அந்த நகரை மீண்டும் கைப்பற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. வருங்காலத்தில் நிகழக் கூடிய செயல்களுக்கு இவை தெளிவான அறிகுறிகளாக விளங்கின."

முதலாம் இராஜராஜன் காலத்தில், தெலுங்குச் சோழரான ஜடா சோடவீமன் சாளுக்கிய மன்னன் சக்திவர்மனை வென்று அவனைக் காஞ்சி வரையில் துரத்தி வந்தான். இராஜராஜன், ஜடா சோடவீமனைப் போரில் கொன்று வேங்கி நாட்டை சக்தி வர்மனுக்குத் திருப்பி அளித்தார். இந்தக் கால கட்டத்துக்குப் பிறகு மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில், நெல்லூர்ச் சோழரான நல்ல சித்தா என்கிற புஜபல வீர நல்ல சித்தன்ன தேவ  சோழ மஹாராஜாவால் காஞ்சி வெல்லப் பட்டது. மூன்றாம் குலோத்துங்கன் காஞ்சியைக் கைப்பற்றி, நெல்லூர்ச் சோழரை மீண்டும் நேரடிச் சோழர்க்கு அடங்கிய சிற்றரசனாக மாற்றினார். இந்தக் கால கட்டம் முதல் நெல்லூர்ச் சோழர், காஞ்சியில் நிரந்தரமாகத் தங்கள் ஆட்சியைத் தொடர்ந்துள்ளனர்.  சோழருக்குப் பின், பாண்டியர், காகதீயர் போன்றோரால் காஞ்சி வெல்லப் பட்டாலும், நெல்லூர்ச் சோழர்கள் தொடர்ந்துப் பேரரசுகளின் மேலாதிக்கத்தை ஏற்றும் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் தன்னிச்சையாகவும் காஞ்சியில் ஆட்சியைத் தொடர்ந்துள்ளனர்.  


#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 5   
#தெலுங்குச்சோழர் 
#காஞ்சிச்சோழர்  

Saturday, 25 May 2019

மூன்றாம் இராஜேந்திர சோழனுக்குப் பிந்தைய சோழர் #4

கரிகால சோழ வம்சம் - தெலுங்குச்சோழர் 

தென்னிந்திய வரலாற்றில் நேரடிச் சோழர்களின் பங்கு மகத்தானது. அதனைப் போன்றே, தெலுங்குச் சோழர்களின் பங்களிப்பும் முக்கியமானது. ஆனால், நேரடிச் சோழர்களும் மற்ற தென்னிந்திய அரசுகளும் பேசப்பட்ட அளவு தெலுங்குச் சோழர்கள் பேசப் படவில்லை.

தெலுங்குச் சோழர்கள் தங்களைக் காவிரி நதியின் கரைகளை உயர்த்திக்கட்டிய பணியில் பங்குபெற்ற திரிலோசனனும் மற்ற அரசர்களும் அடிபணிந்த கரிகாலன் குல விளக்குகள் என்று குறிப்பிடுகின்றனர்.   

கரிகால சோழன் வம்சத்தில் மூத்த மகன் வழி வந்த நேரடிச் சோழர் உறையூர், பழையாறை எனத் தங்களின் ஆட்சியைத் தொடர்ந்தனர். கரிகாலன் வம்சத்தில் இரண்டாவது மகன் தசாவர்மன் வழி வந்தவர்கள் தெலுங்குச் சோழர்கள். 

இந்த  தெலுங்குச் சோழர்கள், கரிகாலனின் வட இந்தியப் படையெழுச்சியின் போதோ அல்லது கரிகாலன் காவேரிக்குக் கரையெழுப்பும் போது உதவ மறுத்த த்ரிலோச்சன பல்லவனை வென்ற பிறகோ அங்கு ஆட்சி செய்ய அனுப்பப் பட்டவர்களாக இருக்க வேண்டும். தெலுங்குச் சோழர் என்னும் பதம் ஒரு அடையாளப் பெயராக, மூத்த கிளையினரான நேரடிச் சோழர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்ட கூறப்படும் வார்த்தை. இது முதன் முதலில், இந்தியக் கல்வெட்டுத் துறைத் தலைமை ஆய்வாளராகப் பணி செய்த ராய் பகதூர் வெங்கய்யா என்பவரால் கி.பி. 19-ம் நூற்றாண்டின் இறுதியில் அறிமுகப் படுத்தப்பட்டது. மற்றபடி அவர்கள் கரிகால சோழ வம்சம் என்றே அழைக்கப் பட்டுள்ளனர். 

தெலுங்குச் சோழர்களின் குறிப்புகள், கரிகாலனின் தந்தை ஜடா சோழன் (இளஞ்சேட்சென்னி?), அயோத்தியா தேசத்திலிருந்து தெற்கு நோக்கி படை எடுத்து வந்து, திரவிள பஞ்சகத்தை வென்று, காவேரிக் கரையில் ஆட்சி செய்த உறையூர் மன்னனை வீழ்த்தி அந்த நாட்டைக் கைப்பற்றியதாகக் குறிப்பிடுகிறது. சோழர்கள் சூரிய குலத்தை சேர்ந்தவர்கள் என்பதை கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் இலக்கியங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இருப்பினும், கரிகாலனின் தந்தையின் காலகட்டத்தில் தான் அவர்கள் அயோத்தியிலிருந்து வந்திருப்பார்களா என்பது சந்தேகத்துக்குரிய விஷயம். கரிகாலனின் காலத்துக்கு வெகு காலம் முன்பே சோழர்கள் காவேரிப் பூம்பட்டினத்தில் ஆட்சி செய்திருக்கிறார்கள். பரசுராமர் கால கட்டத்தில் வாழ்ந்த, காவேரிக்குக் குடகிலிருந்து புகார் வரை வழித் தடம் அமைத்த காந்தமன் இதற்கு ஒரு எடுத்துக் காட்டு. எனில், முந்தைய கால கட்டத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை கரிகாலனின் தந்தையான ஜடா சோழன் மீது ஏற்றிக் கூறப் பட்டிருக்கலாம். 
 
தெலுங்குச் சோழர்களின் முக்கிய கிளைகள்

1. ரேணாண்டு சோழர் - கரிகாலனின் வம்சத்தில் வந்த நந்திவர்மன் (கி.பி. 550)  வழி வந்தவர்கள். 
2. பொத்தப்பிச் சோழர் - கரிகாலனின்  வம்சத்தில் வந்த தசாவர்மனின் வழி வந்தவர்கள்
3. கோனிதேனா சோழர் - கரிகாலனின்  வம்சத்தில் வந்த தசாவர்மனின் வழி வந்தவர்கள் 
4. நிடுகல் சோழர் - கரிகாலனின் வம்சத்தில் வந்தவர்கள்
5. நெல்லூர்ச் சோழர் - கரிகாலனின்  வம்சத்தில் வந்த மதுராந்தக பொத்தப்பி சோழனின் வழி வந்தவர்கள்
6. எருவா சோழர் - கரிகாலனின்  வம்சத்தில் வந்தவர்கள்
7. கண்டூர் சோழர் - கரிகாலனின்  வம்சத்தில் வந்தவர்கள்
8. ஹேமாவதி சோழர் - கரிகாலனின்  வம்சத்தில் வந்தவர்கள்

i ) வேலணாண்டு சோழர் - மற்ற சோழர்களைப் போன்று சத்ரிய மரபும், சூரிய குலமும் அல்லாமல் நான்காம் வருணத்தில் (சதுர்த்தன்வய) பிறந்த இந்திரசேனாவின் வம்சத்தில் வந்தவர்கள். சோட கங்கேய ராஜா, சோட கொங்க ராஜா, சோடய்ய ராஜா என்று அழைக்கப் பட்டவர்கள். இவர்களுக்கு சோழர் என்ற பெயர் வந்ததற்கான காரணம் அறிய முடியவில்லை. குண்டூர், பித்தர்புரம் போன்ற பகுதிகளை ஆட்சி செய்தவர்கள். 

#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 4