Friday, 26 April 2019

சோழங்கன் யார்? #15


"வீரமே துணையாகவும் தியாகமே அணியாகவும்" என்ற வீரராஜேந்திரனின் மெய் கீர்த்தி கூறும் ஒற்றை வரி, மிக நீண்ட வரலாறு உடையது. கங்கை திக்விஜயத்தில் ஆரம்பித்த அவரது போர்ப் பயணம், முதலாம் இராஜேந்திரன், இராஜாதிராஜன், இரண்டாம் இராஜேந்திரன், இராஜ மகேந்திரன் மற்றும் தன்னுடைய ஆட்சியின் இறுதிக் காலம் வரை பெரும்பாலான நேரங்களில் போர்க் களத்திலேயே கழிந்துள்ளது. கங்கைப் படையெழுச்சியின் படைத்தலைவன், தந்தையைப் போன்றே கடல் கடந்து கடாரம் வென்றவன் என்னும் புகழுக்குரியவர்.  மனுகுல கேசரி, இராஜாதிராஜன், இராஜ மகேந்திரன், மதுராந்தகன் எனத் தன்னுடைய நான்கு சகோதரர்களின் உயிர் குடித்த சாளுக்கியத்தை ஐந்து முறை வென்று, தன்னுடன் பிறந்த முன்னவர் விரதம் முடித்தவன் என்ற பெருமைகளை உடையவர். கரிகாலன், இராஜராஜன், இராஜேந்திரன் ஆகியோருக்கு இணையான பெரு வீரனெனத் திகழ்ந்தவர் வீர ராஜேந்திரர். 

சகல புவனாசிரியன், ஸ்ரீ மேதினி வல்லவன், மகாராஜாதிராஜன், பரமேசுவரன், பரம பட்டாரகன், ரவிகுல திலகன், சோழகுல சேகரன், பாண்டிய குலாந்தகன், ஆகவமல்லகுல காலன், ஆகவமல்லனை ஐம்மடி வென்கண்ட ராஜசேகரன், ராஜாஸ்ரயன், ராஜராஜேந்திரன், வல்லப வல்லபன், வீர சோழன், கரிகாலச்சோழன், வீரன் இரட்ட ராஜகுல காலன், வீரணுக்கன், சோழ கங்கன், சோழங்கன், கங்கை கொண்டான், சோழ லங்கேஸ்வரன், ஹரசரண சேகரன் என்பவை இவருக்கு வழங்கப் பட்ட பெயர்கள். வீரணுக்கன் விஜயம், பண்டு பரணி, கூடல் சங்கமத்துப் பரணி, வீர சோழியம் என நான்கு நூல்கள் ஒரு சோழன் மீது இயற்றப்பட்ட நிகழ்வும், இவர் ஒருவருக்கே இருக்கக் கூடும். பழம்பெரும் அரச குடும்பங்களின் குடிப் பெயரும் இவரது பெயரால் மாற்றமடைந்துள்ளதைப் பார்க்கும் போது, இவரது பெருமை விளங்கும். வீர ராஜேந்திரன் இன்னும் பல்லாண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தால், வரலாற்றின் போக்கே வேறு வகையாக மாறியிருக்கும் என்று நீலகண்ட சாஸ்திரிகள் குறிப்பிடுகிறார். 

வீர ராஜேந்திரன் மற்றும் இவரது மகன் அதிராஜேந்திரனின் மரணத்துக்குப் பின் நடந்த போர்களில் முக்கியமானவை, இவரது வாரிசுகளுக்கிடையே நடத்தப் பெற்றவையே. ஒரு புறம் இவரது (தங்கை வழி) மருமகன் குலோத்துங்கன் சோழ நாட்டு அரியணையிலும், மறு புறம் இவரது மருமகன் விக்கிரமாதித்யன் சாளுக்கிய தேசத்திலும், இன்னொரு புறம் இவரது மகள் வயிற்றுப் பேரன் அனந்த வர்மன் கலிங்கத்திலும் தாங்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என நிரூபித்துக் கொண்டிருந்தனர்.

சோழங்கன் யார் என்ற தேடல், சோழர் வரலாற்றின் சில இருண்ட பக்கங்களுக்கு வெளிச்சம் காட்டியிருக்கிறது. முதலாம் இராஜேந்திரன் காலம் முதல் அதி ராஜேந்திரன் காலம் முடிய 3 சோழ லங்கேஸ்வரர்கள், 4 சோழ பாண்டியர்கள், 3 சோழ கேரளர்கள், 3 சோழ பல்லவர்கள் மற்றும் 3 சோழ கங்கர்கள் எனக் கட்டுக்கோப்பான சோழப் பேரரசின் ஆட்சி முறையை அறிய முடிகின்றது. வீர ராஜேந்திரரின் ஆட்சியும், அவரைத் தொடர்ந்து அதி ராஜேந்திரரின் ஆட்சியும், நீண்ட காலம் தொடர்ந்திருந்தால், இந்தக் கட்டமைப்பு நீடித்து சோழப் பேரரசு வேறு பரிணாமத்திற்கு சென்றிருக்கக் கூடும். இருப்பினும் சாம்ராஜ்யங்கள் வீழ்வதும், வீழ்வது எழுவதும் இயற்கையின் நியதி. நான்கு தலைமுறைகள் நீடித்த சாளுக்கிய சோழரின் ஆட்சிக்குப் பின், மீண்டும் வீர ராஜேந்திரரின் வம்சமே ஆட்சிக்கு வந்துள்ளதையும் அறிய முடிகின்றது. குறிப்பாக மூன்றாம் குலோத்துங்கன், தான் வீர ராஜேந்திரரின் வழி வந்தவன் என்பதை உணர்த்தும் வகையில், கரிகாலன், வீர ராஜேந்திரன், சோழங்கன், கோனேரின்மைக் கொண்டான், ஹரசரண சேகரன் என்ற வீர ராஜேந்திரனின் பெயர்களைப் பூண்டதுடன், வீர ராஜேந்திரரின் "புயல்வாய்த்து வளம்பெருகப் பொய்யாத நான்மறையின்" என்னும் மெய் கீர்த்தியையும் பயன்படுத்தி, பல்வேறு வழிகளில் தான் வீர ராஜேந்திரரின் வம்சம் என்பதை நிரூபித்துச் சென்றுள்ளார். மூன்றாம் இராஜேந்திரருடன் சோழர்களின் ஆட்சி முடிந்துள்ளது. ஆனால் சிலர், மூன்றாம் இராஜேந்திரருடன் சோழர்கள் அனைவரும் இறந்து விட்டனர் அல்லது காணாமல் போய் விட்டார்கள் என்று கருதுகிறார்கள். சோழர்கள் காலத்தில் வாழ்ந்த அத்தனை மக்களின் வழி வந்தவர்களும் இன்றும் இருக்கும் போது, சோழர்கள் மட்டும் காற்றில் கற்பூரமாய் கரைந்து விட்டார்கள் என்று நம்புவது என்ன விதமான நம்பிக்கை என்று புரியவில்லை. சோழர்கள் எப்போதும் சூப்பர்மேன்களாகவே இருக்க வேண்டும் என்னும் அவர்களின் அதீத ஆசையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், எழுவது விழும், வீழ்வது எழும் என்னும் இயற்கையின் நியதிக்கு சோழர்களும் விதி விலக்கானவர்கள் அல்ல.

இந்தத் தேடலில் சில புதிய விஷயங்கள் கிடைத்துள்ளன. அவை,

1. இயற்கைப் பேரழிவாலேயே சோழர்கள் தஞ்சையை விட்டு கங்கை கொண்ட சோழ புரத்திற்கு குடி பெயர்ந்தனர் 
2. முதலாவது சோழ லங்கேஸ்வரன் - இராஜ மகேந்திரன்
3. இராஜாதிராஜன் - மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியன்
4. மனு குல கேசரி - இராஜேந்திரரின் முதல் மகன் இராஜராஜன்
5. முதலாம் இராஜேந்திரரின் தம்பி கங்கை கொண்ட சோழன், இரண்டாவது சோழ கேரளனாக பதவி வகித்தது 
6. கங்கைப் படையெழுச்சியின் படைத் தலைவன் வீர ராஜேந்திரன் 
7. சோழங்கன் என்னும் பெயர் வீர ராஜேந்திரரிடமிருந்தே வந்துள்ளது 
8. கங்கை கொண்ட சோழபுரம் பகுதியிலுள்ள சோழனார் குடும்பங்களின் குடிப்பெயர் சோழங்கனார் என வீர ராஜேந்திரரைத் தொடந்தே மாறியுள்ளது 
9. கீழை கங்கர்களின் குடிப் பெயர் சோழகங்க தேவர் என வீரராஜேந்திரரின் பெயர் கொண்டே அவரது மகள் வயிற்றுப் பெயரன் அனந்த வர்மன் மூலம் மாறியுள்ளது 
10. நான்கு தலைமுறை சாளுக்கிய சோழரின் ஆட்சிக்குப் பின் வீர ராஜேந்திரரின் வம்சமே சோழர் ஆட்சியைத் தொடர்ந்தது 

இவை அனைத்தும், வரலாற்று ஆய்வாளர்கள் மேலாய்வு செய்யும் போது உறுதிப் படுத்தப் படும் என்று நம்புகிறேன். விஜயாலயன் முதல் மூன்றாம் இராஜேந்திரன் வரையிலான சோழர் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள, ஒவ்வொரு மன்னரின், தமிழகம் மற்றும் வெளியிடங்களில் உள்ள  அவர்களின் கல்வெட்டுகளையும் தொகுத்து, தனித்தனி தொகுதிகளாக வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும். ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் மட்டும் சிரமம் எடுத்து செய்யக் கூடிய விஷயங்கள், பொதுவானப் பார்வைக்கு வரும் போது, பல்வேறு கருத்துக்களையும் உள்ளடக்கிய உண்மையான முழுமையான சோழர் வரலாறு எழுதப்படும். கல்வெட்டு ஆய்வாளர்களும், காலமும் கைக் கொடுத்தால் இந்தப் பணி செவ்வனே நிறைவேறும்.




#சோழங்கன்யார் 15

Thursday, 25 April 2019

சோழங்கன் யார்? #14

வீரராஜேந்திர சோழகங்கன்  

வீர ராஜேந்திரனுக்கு இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இவர்களில் ஒருவரை சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தனுக்கும், இன்னொருவரை கலிங்க நாட்டு மன்னன் இராஜராஜனுக்கும் திருமணம் செய்து கொடுத்துள்ளார். வீர ராஜேந்திரனின் புதல்வி இராஜசுந்தரியே கலிங்க மன்னன் இராஜராஜனை திருமணம் செய்தவர்.  வீர ராஜேந்திரனின் மகள் ராஜசுந்தரிக்கும், கலிங்க மன்னன் இராஜராஜனுக்கும் பிறந்த மகனே புகழ் பெற்ற அனந்தவர்மன். 70 ஆண்டுகள் கலிங்கத்தை ஆட்சி செய்ததும், பூரி ஜகந்நாதர் கோவிலைக் கட்டியதும், 350 வருடங்களுக்கு மேல் இன்றைய ஒரியா பகுதியை அரசாண்ட கீழைகங்க வம்சத்தை தோற்றுவித்ததும் இந்த அனந்த வர்மனே. முதலாம் குலோத்துங்கனுக்கு திறை கட்ட மறுத்து, அதன் மூலம் நடை பெற்ற கலிங்கத்துப் போரும் இந்த அனந்த வர்மனுக்கு எதிராக நிகழ்ந்தவையே.  

 இந்த அனந்த வர்மன் தனது தாய் வழிப் பாட்டன் வீர ராஜேந்திரரனின் பெயரான 'சோழ கங்கன்' என்பதனைக் கொண்டே 'சோழ கங்க தேவன்' என்ற புதியக் குடிப் பெயரினைத் தனது கீழை கங்க வம்சத்திற்கு உருவாக்கியிருக்க வேண்டும்.

இதனை உறுதி செய்வது போல் அனந்த வர்மன், வீர ராஜேந்திர சோழகங்கன் என்னும் பெயருடன் கல்வெட்டுகளில் குறிக்கப் பெற்றிருக்கிறார்.


இதனைப் போன்றே  முதலாம் குலோத்துங்கன் தனது தாய் வழிப் பாட்டன் பெயரால்  இராஜேந்திர சோழன் என அழைக்கப் பட்டுள்ளார்.
இரண்டையும் நோக்கும் போது தாய் வழிப் பாட்டன் பெயரை குடிப்பெயரோடு மகள் வழிப் பெயரன்கள் வைத்துக் கொள்ளும் மரபு அந்தக் காலத்தில் இருந்துள்ளதை அறிய முடிகின்றது.

முதலாம் குலோத்துங்கனின் தாய் அம்மங்காதேவி, வீர ராஜேந்திரரின் சகோதரி. அனந்த வர்மனின் தாய் இராஜசுந்தரி, வீர ராஜேந்திரரின் மகள். எனில், குலோத்துங்கன், அனந்த வர்மனுக்கு சித்தப்பா முறை. குலோத்துங்கனும் தன்னைப் போன்றே தாய் வழி மூலம் சோழ தேசத்தின் உறவினன் என்ற எண்ணம் மேலோங்கியதாலேயே, அனந்த வர்மன், குலோத்துங்கனுக்கு திறை கட்ட மறுத்திருக்க வேண்டும்.  முதலாம் குலோத்துங்கனுக்கும், அனந்த வர்மனுக்கும் இடையேயான கலிங்கத்துப் போருக்கான பின்னணியும் இதுவாகவே இருக்க வேண்டும்.   

References 

1. தமிழ் நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி IV - ப 177
1. தமிழ் நாட்டு வரலாறு சோழப் பெருவேந்தர் காலம் - P 199
3. Epigraphia Indica XXIX P 46
4. சோழர்கள் - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி P 395,397

#சோழங்கன்யார் 14

Wednesday, 24 April 2019

சோழங்கன் யார்? #13

சோழங்கன், கங்கை கொண்டான் 

வீர ராஜேந்திரன், சோழலங்கேஸ்வரனாக இலங்கையில் கி.பி.1038-54 காலகட்டத்தில்  ஆட்சி செய்துள்ளார். இந்தக் கால கட்டத்தில், இவர் சோழங்கன் என்றே அறியப் பட்டிருக்கிறார். இலங்கைப் பேராசிரியர் வேலுப் பிள்ளையும், 'சோழ லங்கேஸ்வரன்', 'சோழகங்கன்' இருவரும் ஒருவரே எனக் குறிப்பிடுகிறார்.

இலங்கையின் வட பகுதியில், பருத்தித்துறை ---> நெல்லியடி ---> சாவகச்சேரி வீதியின் 5-ஆம் மைல் கல்லின் வடக்கும் தெற்குமாக அமைந்துள்ள பெரிய பகுதி காரணவாய் எனப்படும். இதன் தெற்கு எல்லையில் பரவைக் கடல் உள்ளது. இங்கு கங்கை கொண்டான், சோழங்கன் என்னும் ஊர்கள் அமைந்துள்ளன. கங்கை கொண்டான் என்ற பெயரை வைத்துப் பார்க்கும் போது, இது கங்கை வெற்றிக்குப் பின்னர், இராஜேந்திர சோழன் காலத்திலேயே குறிப்பாக வீர ராஜேந்திரன் சோழ லங்கேஸ்வரனாகப் பதவி வகித்த காலத்திலேயே அமைக்கப் பட்டிருக்க வேண்டும். இராஜேந்திரர், கங்கை வெற்றிக்குப் பின் கங்கை கொண்ட சோழன் என்று அறியப் பட்டவர். அதைப் போன்றே கடார வெற்றிக்குப் பின் கடாரங்கொண்டான் என அழைக்கப் பட்டவர். எனில், இங்கு குறிப்பிடப் படும் கங்கை கொண்டான் என்பது வீர ராஜேந்திரரையேக் குறிக்க வேண்டும். அதைப் போன்றே சோழங்கன் என்பதும் வீர இராஜேந்திரரையேக் குறிக்க வேண்டும். அப்படி இல்லையெனில், இவை இரண்டும் முதலாம் இராஜேந்திரரைக் குறிக்க வேண்டும். எனினும் மற்ற தரவுகளை வைத்துப் பார்க்கும் போது, இவை வீர ராஜேந்திரரையே குறிப்பிடுகின்றன  என்பது புலனாகின்றது.

தோம்புகளில் இடம்பெற்றுள்ள “சோழங்கன்புலம்”, “சோழங்கன் வளவு” முதலான காணிப் பெயர்கள் இன்றும் மக்கள் வழக்கிலுள்ளன.

References 

1.  குளக்கோட்டன் தரிசனம் .84-85
2.  இலங்கை இடப்பெயர் ஆய்வு -2  108
3.  பேராசிரியர் இ. பாலசுந்தரம் http://varanyontrium.ca/index.php?option=com_content&view=article&id=195:2014-03-13-16-45-55&catid=98&Itemid=653


#சோழங்கன்யார் 13

Tuesday, 23 April 2019

சோழங்கன் யார்? #12

"உபாசகஜனலங்கார" என்னும் பௌத்த நூல் குறிப்பிடும் சோழ கங்கன் :

பாலி மொழியில் கி.பி. 11-ம் நூற்றாண்டில், மஹாதீர ஆனந்தா என்பவரால் எழுதப்பட்ட உபாசகஜனலங்கார (The Upasakajanalankara) என்னும் பௌத்த நூல், சோழ கங்கன் என்பவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இந்த நூலைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்றினை Dr. பார்னட் அவர்கள் கி.பி. 1901-ல், "The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland"  இதழில் வெளியிட்டிருக்கிறார். அந்த நூல், சோழ கங்கன் என்னும் சோழ அரசன், புத்த துறவிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மூன்று புத்த விகாரங்களை பண்டு பூமண்டலத்தில் (Pandubhumandale) ஏற்படுத்திக் கொடுத்தார் எனக் குறிப்பிடுகின்றது. இந்த சோழ கங்கன் என்பவர் பாண்டிய நாட்டில் (Pandubhumandale) படிநிகராளியாக இருந்தவர் என்று Dr. பார்னட் குறிப்பிடுகின்றார். மேலும், இதில் குறிப்பிடப்படும் சோழ கங்கன் என்பவர் அனந்த வர்மன் என்பது அவரின் கருத்து. 

தென்னிந்தியக் கல்வெட்டுகள் மூன்றாம் தொகுதியினைப் பதிப்பித்த திரு ஹுல்ஷ் அவர்கள் இதனை மறுத்துள்ளார். பௌத்த நூலில் குறிப்பிடப்படும்  சோழ கங்கன் என்பவர் சோழ வம்சத்தை சேர்ந்தவர், ஆனால் அனந்த வர்மன் கீழை கங்கர் இனம் என்பதனால், இந்த சோழ கங்கன் அனந்த வர்மனாக  இருக்க வாய்ப்பில்லை என்று குறிப்பிடுகிறார். முதலாம் இராஜேந்திரனே இந்த சோழ கங்கன் என்பது ஹுல்ஷ் அவர்களின் முடிவு. இராஜேந்திர சோழன் தனது தந்தையின் கால கட்டத்தில் பாண்டிய நாட்டின் படி நிகராளியாக இருந்திருக்கலாம் என்பது அவருடைய கணிப்பு. மேலும் கங்கைப் படையெழுச்சியின் வெற்றிக்குப் பின் கங்கை கொண்ட சோழன் என்று அறியப்பட்டவர் இராஜேந்திர சோழன். சோழ கங்கன் என்பதும் அவருடைய பெயரே, தன்னுடைய பெயரைக் கொண்டே சோழ கங்கம் என்னும் ஏரியையும் அவர் வெட்டுவித்தார் என்பதும் அவரின் வாதம். முதலாம் இராஜேந்திரன், படி நிகராளியாக இருந்தார் என்றால் அது இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில். சோழ கங்கன் என்னும் பெயர் கங்கை வெற்றிக்குப் பின்னர் வந்தது என்றால், பிற்காலத்தில் வரக் கூடிய பெயரை அவர் முன்னரே சூடியிருக்க வாய்ப்பு இல்லை. கங்கவாடி உள்ளிட்ட பகுதிகளின் படி நிகராளியாக இருந்த போது அந்தப் பெயர் வந்ததென்றால் அதற்கான வாய்ப்புகளும் இல்லை. இராஜராஜன், கங்கவாடி உள்ளிட்ட பகுதிகளின் படி நிகராளியாக இராஜேந்திரனை நியமிக்கும் போது பஞ்சவன் மாராயன் என்றும் தண்டமஹா நாயகன் என்றும் தான் குறிப்பிட்டுள்ளார். மேலும் படி நிகராளிகள் சோழ என்னும் அடை மொழியோடு சோழ பாண்டியன், சோழ கங்கன் என இராஜேந்திரன் காலம் முதல் தான் அழைக்கப் பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது இது இராஜேந்திரராக இருக்க வாய்ப்புக் குறைவு. 

பௌத்த நூல் குறிப்பிடும் சோழ கங்கன், இராஜேந்திர சோழன் இல்லையெனில், பண்டுபூமண்டலம் என்பது பாண்டிய நாட்டைக் குறித்தது எனில், அது இராஜேந்திர சோழரின் மகனான இராஜ மகேந்திரனைக் குறிக்கலாம். இராஜ மகேந்திரன் கி.பி. 1038 முதல் 1052 வரை சோழ கங்கன் என்னும் பெயருடன் படி நிகராளியாக கங்கவாடிப் பகுதியை நிர்வகித்தவர். கி.பி. 1052-ல், இரண்டாம் இராஜேந்திரன் ஆட்சிக் காலத்தில் இவரே சோழ பாண்டியன் என்னும் பெயருடன் பாண்டிய நாட்டில் படி நிகராளியாக இருந்தவர். எனவே, பௌத்த நூல் குறிப்பிடும் பண்டுபூமண்டலம் என்பதை பாண்டிய நாடு எனக் கருதினோமானால், அதில் குறிப்பிடப்படும் சோழ கங்கன் என்பது இராஜ மகேந்திரனாக இருக்கலாம்.   

ஆனால், ''உபாசகஜனலங்கார'' குறிப்பிடும் பண்டுபூமண்டலம் என்பது இலங்கையையேக் குறிக்க வேண்டும். "உபாசகஜனலங்கார" பாலி மொழியில் எழுதப்பட்ட நூல். பண்டு என்னும் பாலி வார்த்தைக்கு இளஞ்சிவப்பு (அ) காவி உடை என்று பொருள். இது புத்த பிட்சுகள் அணியும் உடையின் நிறம். எனவே, புத்த பிட்சுகள் வசிக்கும் நாடாகிய இலங்கை என்று பொருள் கொள்ளலாம். அல்லது பண்டு என்னும் மன்னர்கள் ஆண்ட நாடான இலங்கை என்று பொருள் கொள்ளலாம். விக்கம பண்டு என்னும் மன்னன் இலங்கையில் கி.பி 1044 முதல் 1047 வரை ரோஹணப் பகுதியை ஆண்டுள்ளார். விக்கம பண்டுவைத் தொடர்ந்து அவரது மகன் பராக்கிம பண்டு கி.பி. 1053 வரை ஆட்சி செய்துள்ளார். இதே கால கட்டத்தில் தான் (கி.பி. 1038- 1052), சோழகங்கன் என்னும் பெயர் கொண்ட வீர ராஜேந்திரன் சோழ இலங்கேஸ்வரனாக இலங்கையில் ஆட்சி புரிந்துள்ளார். எனவே, உபாசகஜனலங்கார குறிப்பிடும் சோழ கங்கன், வீர ராஜேந்திரனே என்னும் முடிவுக்கு வரலாம்.      


References 

1. The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland for 1901 -   The Upasakajanalankara - L.D.Barnett P 88-89
2. SII Vol III Part I & II Page 22
3. பிற்கால சோழர் வரலாறு - சதாசிவப் பண்டாரத்தார் ப - 178,199
4. Chola Pandiyan, Chola Gangan, Chola Lankeswaran,Chola Keralan  - N. Sethuraman P 51


#சோழங்கன்யார் 12

Monday, 22 April 2019

சோழங்கன் யார்? #11


வீர ராஜேந்திரன் வட இந்திய விஜயத்தினைத் தலைமையேற்று சென்றிருப்பதற்கு கிடைக்கும் தரவுகள்  
 
6. கரி காலன் வீர ராஜேந்திரன் 

வீர ராஜேந்திரனுக்கு கரிகாலன் என்றொரு பெயர் உண்டு. இரண்டாம் ராஜேந்திரன் காலத்தில் உறையூர் பகுதியின் படி நிகராளியாக இருந்ததனால் இந்தப் பெயர் வந்தது என்றொரு கருத்து இருந்தாலும், கங்கைப் படையெழுச்சியில் ஏற்பட்ட நிகழ்வுகளும் அவருக்கு கரிகாலன் என்றப் பெயர் வரக் காரணிகளாக இருந்திருக்கலாம்.  

கரிகாலன் :

சோழர்களின் இராஜ பரம்பரையைக் குறிப்பிடும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கரிகாலனைப் பின் வருமாருக் குறிப்பிடுகின்றன.

காலத்வாத் கரிணாம் கலேக்ஷ ஸகல க்ஷோணி ப்ருதாம் நாயகம் 
யம் ப்ராஹூ: கலிகாலம் உன்னதிமதாம் அக்ரேஸரம் ஸத்குணை:
காஞ்சீம் ய: ச நவீ சகார கனகை: ஸோபூத் அமுஷ்யான்வயே 
காவேரி தட பந்தன ப்ரகடித ஸ்பீதாத்ம கீர்த்தி: ந்ருப:

இதன் பொருள்:
யானைகளுக்கும் (கரி) கலிகாலத்திற்கும் காலனானதால் கலிகாலன் எனப்பட்ட, அரசர்களுக்கு அரசன் அந்தக் குலத்தில் தோன்றினான். அவன் நற்குணங்களால் உயர்ந்தவர்களில் முதல்வனாகத் திகழ்ந்தவன். காஞ்சி நகரைத் தங்கத்தால் புதுக்கியவன். காவேரியின் கரைகளைக் கட்டித் தன் திரண்ட புகழைக் காட்டிய அரசன்.

கரிகாலன் என்ற சொல்லிற்குப் பலவாறான விளக்கங்கள் கூறப்படுகின்றன. ஆனால், திருவாலங்காட்டுச் செப்பேடுகள் யானைகளுக்கும் (கரி) கலிகாலத்திற்கும் காலனானதால் கரிகாலன் என அழைக்கப் பட்டதாகக் குறிப்பிடுகிறது.

கங்கை திக் விஜயத்தின் கரிகாலன்:

மேலே குறிப்பிட்டுள்ளதைப் போன்றே, கரிகாலன் என்னும் பெயர் வரக் கூடிய நிகழ்வுகள் இரண்டு, திருவாலங்காட்டுச் செப்பேடுகளில், கங்கை திக் விஜயத்தின் போது குறிப்பிடப் படுகின்றது. அவை:

1. கலி ராஜ நியோக காரிணம் ஸபலம் ஸானுஜம் ஒட்டம் ஆஹவே 
ஸ ந்ருபோ வினிஹத்ய வீர்யவான் அத மத்தேப பரிக்ரஹம் சகார 

வீர்யவானான அரசன் (வீர ராஜேந்திரன்)  கலியரசனின் ஆணையை நிறைவேற்றும் ஒட்ட அரசனை தம்பியோடும் படையோடும் கொன்று மதம் கொண்ட யானைகளைக் கைப்பற்றினான்.

2. தத்ர மத்த கஜம் கஞ்சித் அபிதாவந்தம் உச்மு(ன்மு)கம் 
அகாதயத் ஸ்வயம் தேவ: ஸ்வாரூதே(டே)னைவ (ஹ)ஸ்தினா  

அந்தப் போரில் அரசன் தன்னைத் தாக்க ஓடிவந்த யானையைத் தான் ஏறியிருக்கும் யானையைக் கொண்டு தானே கொன்றான்.

இந்த இரண்டு நிகழ்வுகளும், ஒட்ட தேசப் போரின் போது நிகழ்ந்தவை. ஒட்ட தேசம், கங்கைப் படையெழுச்சியின் போது ஏழாவதாக வெல்லப் பட்ட நாடு. இவை இரண்டுமே, வீர ராஜேந்திரரைக் குறிக்கிறது எனில், அவருக்குக் கரிகாலன் என்னும் பெயர் இதன் காரணமாகவே வந்திருக்க வேண்டும்.

வீர ராஜேந்திரரின் சாராலம் செப்பேடுகளும், கரிகாலன் என்னும் பெயருக்கானக் காரணத்தைப் பின் வருமாருக் குறிப்பிடுகின்றது:

வீரசோள ந்ருபதி: கரிகால: காலயன்: கலி பலம் ஸகலம் ஸ:
தர்ம்ம ஸாஸன ஸமுச்சயமுச்சம் வ்யாதநோத் பரதஸார ஸமேதம்  

இதன் பொருள், கரிகாலன் என்னும் பெயருடைய அந்த வீரசோழன், கலியின் முழு பலத்தையும் அழித்தான், அறத்தின் ஆட்சியை உச்சமாக நிலை நிறுத்தினான், பரதனின் சாரத்தைப் பரப்பினான் என்பதாகும்.

சோழர்களில் இதற்கு முன் இமயம் வரைப் படையெடுத்துச் சென்று வெற்றியுடன் திரும்பியவர் கரிகாலன். அவரைப் போன்றே கங்கை வரைப் படையெடுத்துச் சென்று வெற்றியுடன் திரும்பியவர் வீர ராஜேந்திரன். இவை எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது, கரிகாலன் என்ற பெயர்  வீர ராஜேந்திரருக்கு கங்கைப் படையெழுச்சியின் போதே வந்திருக்க வேண்டும் என்று கருதலாம். 

References 

1. சோழர் செப்பேடுகள் - புலவர் வே. மகாதேவன், முனைவர். க. சங்கரநாராயணன் P 525,526,974 
2. இராசேந்திர சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் - சரித்திரச் செம்மல் ச.கிருஷ்ணமூர்த்தி  P 92-93   
3. வீர ராஜேந்திர சோழன் வெளியிட்ட சாராலம் செப்பேட்டுத் தொகுதி -  சரித்திரச் செம்மல் ச.கிருஷ்ணமூர்த்தி  P 67-68

#சோழங்கன்யார் 11

Sunday, 21 April 2019

சோழங்கன் யார்? #10


வீர ராஜேந்திரன் வட இந்திய விஜயத்தினைத் தலைமையேற்று சென்றிருப்பதற்கு கிடைக்கும் தரவுகள் 

3. களிறு கங்கை நீருண்ண 

சோழர்களின் இராஜ பாரம்பரியம் பற்றிக் குறிப்பிடும் கலிங்கத்துப் பரணி இராஜேந்திரனின் சிறப்பைப் பின் வருமாருக் குறிப்பிடுகிறது. 

“களிறு கங்கைநீ ருண்ண மண்ணையில்  
காய்சி னத்தொடே கலவு செம்பியன் 
குளிறு தெண்டிரைக் குரைக டாரமும் 
கொண்டு மண்டலம் குடையுள் வைத்தது ”

இதற்குப் பொருள் கொண்டவர்கள், இராஜேந்திரனின் யானைப்படைகள் கங்கை நீரை அருந்தியது. மண்ணை என்னுமிடத்தில் கடுஞ்சினத்தோடு கர்ஜனை செய்த இராஜேந்திரன் கடல்களுக்கு நடுவே அமைந்துள்ள கடாரம் வெற்றி கொண்டு, ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தான் என்று பொருள் கண்டுள்ளனர். இவ்வாறு பொருள் கொள்ளும் போது , "களிறு கங்கை நீருண்ண" என்ற சொற்றொடர் மற்ற வரிகளுடன் பொருந்தி போகாமல் தொக்கி நிற்பதைக் காணலாம். 

இதனைப் பின் வருமாறுப் பொருள் கொள்வதே பொருத்தமாக இருக்கும்.

மும்முடிச் சோழனின் களிறு என்று அறியப் பட்டவர் இராஜேந்திர சோழன். அதைப் போன்றே, இங்கும் களிறு என்பதை இராஜேந்திரனின் மகனான வீர ராஜேந்திரன் என்றே பொருள் கொள்ள வேண்டும். இப்போது முழுமையானப் பொருளை பார்ப்போம். இராஜேந்திரனின் களிறு வீர ராஜேந்திரன், கங்கைப் படையெழுச்சியில் வெற்றி பெற, மண்ணை என்னுமிடத்தில் கடுஞ்சினத்தோடு கர்ஜனை செய்த இராஜேந்திரன் கடல்களுக்கு நடுவே அமைந்துள்ள கடாரமும் வெற்றி கொண்டு ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தான். அதாவது கங்கை முதல் கடாரம் வரை வெற்றி கொண்டு ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்தவன் என்று பொருள்.  இதுவேப் பொருத்தமான விளக்கமாக இருக்கும்.

4. ரவி குல திலகஸ்ய ஸைன்யநாத: 

கங்கைப் படையெழுச்சிக்கு முந்தைய பாண்டிய நாட்டுப் படையெடுப்பை இராஜேந்திரர் தலைமை தாங்கி சென்றார். அவருடன், அவரது மகன்களில் குறைந்த பட்சம் மனுகுல கேசரியும்,  இராஜாதிராஜனும் பங்கேற்ற போர் அது. சோழர்கள் மேற்கொண்டப் போர்களில், அரசரோ அல்லது இளவரசரோ பெரும்பாலும் படைத்தலைவனாக இருப்பர். இராஜராஜனின் மாதண்ட நாயகனாக இருந்தவர் இராஜேந்திரர். அதைப் போன்றே இராஜேந்திரரின் தண்ட நாயகர்களாக, இராஜேந்திரரின் மகன்கள் இருந்துள்ளனர். பாண்டிய நாட்டுப் படையெடுப்பைப் பற்றிக் குறிப்பிடும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள், படைத்தலைவனை ரவிகுல திலகஸ்ய தண்டநாத: என்று குறிப்பிடுகின்றது. சோழர்கள் சூரிய (ரவி) குலத்தை சேர்ந்தவர்கள். முதலாம் இராஜராஜன், இராஜேந்திரன், இராஜாதிராஜன், வீர ராஜேந்திரன் உள்ளிட்ட சோழர்கள் ரவி குல திலகம் என அழைக்கப் பட்டவர்கள். எனவே, ரவிகுல திலகஸ்ய தண்டநாத: என்பது, ரவிகுல திலகம் என்பதை இராஜராஜனாகக் கொண்டு முதலாம் இராஜேந்திரரையோ அல்லது ரவிகுல திலகம் என்பதை இராஜேந்திரனாகக் கொண்டு மனுகுல கேசரியையோ அல்லது இராஜாதிராஜனையோ குறிக்க வேண்டும். நீலகண்ட சாஸ்திரிகள் தனது "The Pandyan Kingdom" என்னும் நூலில், ரவிகுல திலகஸ்ய தண்டநாதனை, இராஜேந்திர சோழன் எனக் குறிப்பிடுகிறார். 

இதைப் போன்றே, கங்கைப் படையெழுச்சியின் படைத் தலைவனைக் குறிப்பிடும் போது, ரவி குல திலகஸ்ய சைன்யநாத: என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. இது இராஜேந்திரரின் மகனான வீர ராஜேந்திரனையேக் குறிக்க வேண்டும். அதைப் போன்றே சிபிராஜ தண்டநாத:  என்பதும் வீர ராஜேந்திரரையேக் குறிக்க வேண்டும்.

5. தோல்வியுற்ற வேந்தர் தலைகளில் கங்கைநீர் நிரப்பப் பட்ட குடங்கள் 

இராஜேந்திரரின் கங்கைப் படையெழுச்சியை சிறப்பித்துக் கூறும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள், தோல்வியுற்ற வேந்தர் தலைகளில் கங்கைநீர் நிரப்பப் பட்ட குடங்கள் கொண்டு வரப் பட்டதைக் குறிப்பிடவில்லை. வீர ராஜேந்திரரின் கன்னியாகுமரிக் கல்வெட்டே இதனை நேரடியாகக் குறிப்பிடுகின்றது. எனில், தான் பெற்ற வெற்றியின் சிறப்பை அறிந்து அதில் உள்ள விஷயங்களைத் தவறாமல் குறிப்பிட விரும்பிய வீர ராஜேந்திரன் இந்த நுணுக்கமான விஷயத்தையும் கவனத்தில் கொண்டு சேர்த்திருக்க வேண்டும். 

References  

1. கலிங்கத்துப் பரணி - புலவர் பி.ரா. நடராசன் P 112 
2. The Pandyan Kingdom - K.A.Neelakanda Sasthiri - P -108
3. சோழர் செப்பேடுகள் - புலவர் வே. மகாதேவன், முனைவர். க. சங்கரநாராயணன் P 520,524,525, 728, 973 
4. இராசேந்திர சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் - சரித்திரச் செம்மல் ச.கிருஷ்ணமூர்த்தி  P 83,90, 91   
5. வீர ராஜேந்திர சோழன் வெளியிட்ட சாராலம் செப்பேட்டுத் தொகுதி -  சரித்திரச் செம்மல் ச.கிருஷ்ணமூர்த்தி  P 63
6.  Travancore Archaeological Series Vol 3 Part 1 P 146,157

#சோழங்கன்யார் 10

Saturday, 20 April 2019

சோழங்கன் யார்? #9


வீர ராஜேந்திரன் வட இந்திய விஜயத்தினைத் தலைமையேற்று சென்றிருப்பதற்கு கிடைக்கும் தரவுகள்  

2. கங்கைக் கரை பிராமணர்களின் குடியேற்றம் 

திரிலோசன சிவாசாரியாரது சித்தாந்த சாராவளி உரையில், இராஜேந்திரன் கங்கைக் கரையிலிருந்து பல சைவர்களை அழைத்து வந்து காஞ்சி மாநகரிலும், சோழ நாட்டிலும் குடியேற்றினார் என்று கூறப்பட்டுள்ளது.

வீர ராஜேந்திரனின் சாராலம் செப்பேடுகளும், கன்னியாகுமரிக் கல்வெட்டும், அவர் 40,000 பிராமணர்களை சோழ நாடு, தொண்டை நாடு, பாண்டிய நாடு, கங்கவாடி மற்றும் குலூத நாட்டில்  குடியேற்றியதைக் குறிப்பிடுகின்றன. 

பிராமணர்கள் நிறைந்தது கோசல நாடு. இது கங்கைப் படையெடுப்பின் போது வெல்லப்பட்ட நாடு. 

40,000 என்ற எண்ணிக்கையையும், பிராமணர்கள் நிறைந்த கோசல நாட்டிலிருந்தே பிராமணர்கள் குடியேற்றப் பட்டிருக்க வேண்டும் என்பதையும் வைத்துப் பார்க்கும் போது, இது கங்கைப் படையெடுப்பு என்னும் பெரியப் படையெடுப்பின் போதே நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு.
எனவே, வீர ராஜேந்திரரே கங்கைப் படையெழுச்சியின் வெற்றிக்குப் பின்னர் நாடு திரும்பும் போது கோசல நாடு மற்றும் கங்கைக் கரையிலிருந்து 40,000 பிராமணர்களை அழைத்து வந்து சோழ நாடு, தொண்டை நாடு, பாண்டிய நாடு, கங்கவாடி மற்றும் குலூத நாடுகளில் குடியேற்றியிருக்க வேண்டும். திரிலோசன சிவாசாரியாரது சித்தாந்த சாராவளி உரையிலும், வீர ராஜேந்திரரின் சாரால செப்பேடுகளிலும் குறிப்பிடுப் படும் இந்த நிகழ்வுகள் ஒரே நிகழ்வாகவே இருக்கலாம்.

References 

1. சோழர்கள் - நீல கண்ட சாஸ்திரி P 284
2. சோழர் செப்பேடுகள் - புலவர் வே. மகாதேவன், முனைவர். க. சங்கரநாராயணன் P 975
3. Travancore Archaeological Series Vol 3 Part 1 P 148-149

#சோழங்கன்யார் 9

Friday, 19 April 2019

சோழங்கன் யார்? #8


வீர ராஜேந்திரன் வட இந்திய விஜயத்தினைத் தலைமையேற்று சென்றிருப்பதற்கு கிடைக்கும் தரவுகள் 

1. வீரணுக்கன் விஜயம்

"பண்டைய காலத்தில் கல்வெட்டுகளில் மட்டும் குறிப்பிடப்பட்டு மறைந்து போன நூல்கள் உண்டு. மறைந்து போன நூல்கள் பற்றி பழங்காலத் தெளிவுரை, பதவுரை, பொழிப்புரைகளில் முன்னைய கவிதை நூல்கள், ஆசிரியப்பாவின் இயல்புடைய நூற்பாவாகிய சூத்திரங்கள் ஆகியவற்றிலிருந்து சிறிய ஒரு மேற்கோள்கள் கிடைக்கின்றன. இவற்றிலிருந்து அழிந்து போன நூலகள் மிகச் சிறந்தவை என்று முடிவு செய்யலாம். எந்த நாட்டின் பழைய இலக்கியத்திற்கும் இந்த கருத்து ஓரளவு பொருந்தும். ஆனால் தென்னிந்தியாவைப் பொறுத்த வரையில் இவ்வகையில் ஏற்பட்ட நஷ்டம் மிகப் பெரியது, பேரிழப்பே என்று தங்கு தடையின்றி சொல்லலாம்."

தன்னுடைய சோழர்கள் என்னும் நூலில், திரு நீலகண்ட சாஸ்திரிகள் மேற்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

அவ்வாறு தொலைந்து போன சோழர் காலத்து மிக முக்கியமான நூல்களிள் சில: 

இராஜராஜ விஜயம்
இராஜராஜேஸ்வர நாடகம் 
வீரணுக்கன் விஜயம்
பண்டு பரணி  
கூடல் சங்கமத்துப் பரணி 
கொப்பத்துப் பரணி 
தமிட்பரணி 

இதில் வீரணுக்க விஜயம் என்னும் நூலைப் பற்றி பார்ப்போம். 

திருவாரூர்க் கோயிலின் முதல் பிரகாரத்தில் தெற்குத் திருமதிலில் உள்ள இராஜேந்திர சோழனின் 13-ஆம் ஆட்சியாண்டின் 202-ஆம் நாள் கல்வெட்டொன்று, வீரணுக்க விஜயம் பற்றிக் குறிப்பிடுகிறது. திருவாரூர்க் கோயிலின் ஒரு மண்டபத்தில் பூங்கோயில் நாயகத் தலைக்கோலி என்பவள் ஆடிய நடனத்தை அரசன் பார்த்துக் கொண்டிருந்த போது, மகனான வீர சோழ அணுக்கரை கௌரவிப்பதற்காக வீரணுக்கன் விஜயம் என்னும் காப்பியம் இயற்றிய பூங்கோயில் நம்பிக்கு, வாயாற்றூர் என்னும் பிரம்ம தேய கிராமத்தில் இறையிலி நிலத்தை இராஜேந்திர சோழன் விட்ட செய்தியைக் குறிப்பிடுகிறது.

வீரணுக்கன் என்பது வீர ராஜேந்திரரின் பெயர். இராஜேந்திர சோழனின் 13-ஆம் ஆட்சியாண்டின் 202-ஆம் நாள் என்பது, கங்கை திக் விஜயம் முடிந்த பின்பும், கடாரப் படையெடுப்புக்கு முந்தைய காலகட்டமும் ஆகும். ஒரு காப்பியம் பாடும் அளவுக்கு,  இராஜேந்திர சோழனின் 13-ஆம் ஆட்சியாண்டுக்கு முந்தைய வீர ராஜேந்திரரின் திக் விஜயம் என்பது வட இந்திய விஜயமாகவே இருக்கும்.

வீரணுக்க விஜயம் என்னும் நூல் கிடைத்திருந்தால், வீர ராஜேந்திரன் கங்கைப் படையெழுச்சிக்குத் தலைமை தாங்கியதற்கு மிகச் சிறந்த சான்றாக இருந்திருக்கும். இருப்பினும் நூலின் தலைப்பையும், அது எழுதிய கால கட்டத்தையும் நோக்கும் போது, இது கங்கை விஜயத்தையே குறிக்க வேண்டும். (அப்படி இல்லையெனில், இராஜேந்திரரும் சோழர்ப் படைகளும் மிக முக்கியமான வட இந்தியப் படையெடுப்பில் ஈடுபட்டிருக்கும் காலத்தில், வீர ராஜேந்திரன் வேறு நாடுகளில் திக் விஜயம் மேற்கொண்டார் என்று பொருள் கொள்ள வேண்டும். அப்படி போர்கள் நடந்ததற்கான தரவுகள் ஏதும் இல்லை.) எனவே, வீரணுக்கன் விஜயம் என்னும் நூல், வீர ராஜேந்திரன் தலைமை தாங்கி நடத்திய வட இந்திய திக் விஜயத்தை பற்றி இயற்றப்பட்டதகாகவே இருக்க வேண்டும். மேலும், இதற்கு முன் இராஜராஜருக்கு மட்டுமே இராஜராஜ விஜயம் என்னும் காப்பியம் பாடப் பட்டுள்ளது. அவருக்கு அடுத்து இராஜேந்திரருக்கு காப்பியம் படைக்காமல் வீர ராஜேந்திரருக்கு ஒரு காப்பியம் படைக்கப் பட்டிருக்கிறது எனில், அதுவும் இராஜேந்திரன் காலத்திலேயே கங்கைப் படையெழுச்சி முடிந்தவுடன் இயற்றப் பட்டிருக்கிறது எனில் அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம். 

எனவே, வீர ராஜேந்திரன் கங்கைப் படையெழுச்சிக்குத் தலைமை தாங்கினார் என்பதற்கு இதனை முக்கியமான சான்றாகக் கொள்ளலாம்.

References 

1. தமிழ் நாட்டு வரலாறு சோழப் பெருவேந்தர் காலம் - P 353
2. சோழர்கள் - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி P 874
3. மறைந்து போன தமிழ் நூல்கள் -மயிலை சீனி. வேங்கடசாமி  P 138-139
4. திருவாரூர் - வித்வான் தண்டபாணி தேசிகர் - P 42 
5. ARE 548 of 1904

Thursday, 18 April 2019

சோழங்கன் யார்? #7

இராஜேந்திரரின் கங்கை திக் விஜயம் - சோழ கங்கமும், சோழ கங்கனும் 

இராஜேந்திரனின் கங்கைப் படையெழுச்சிக்குக் காரணம், தான் புதியதாக அமைத்தத் தலைநகரை, கங்கை நீரைக் கொண்டுப் புனிதப் படுத்த எண்ணியதேக் காரணம் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன. கங்கை நீரைக் கொண்டு வருவது முதன்மையான நோக்கமாக இருந்தாலும், வட  இந்திய மன்னர்கள், சோழர்ப் படையின் பலத்தை அறியுமாறு செய்வதே இப்படையெடுப்பின் நோக்கமாயிற்று என்கிறார் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரிகள். வட இந்திய மன்னர்களிடம் யாசகம் பெற்றோ அல்லது பகீரதனைப் போன்று தவ வலிமையாலோ கங்கை நீரைக் கொண்டு வர விரும்பாமல், இராஜேந்திரர் தனது தோள் வலிமையின் பேராற்றலால் கங்கை நீரைக் கொண்டு வர விரும்பினார் என்று அறிய முடிகின்றது.    

கங்கை நீரைக் கொண்டு வரும் போது வட இந்திய மன்னர்கள் எதிர்ப்புத் தெரிவித்து தடை செய்யக் கூடும் என்பதை முன் கூட்டியே அறிந்திருந்த இராஜேந்திரர், அஞ்சா நெஞ்சமும், பெரு வீரமும் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான சோழர்ப் படையை அணி வகுக்கச் செய்தார். அப்பெரும் படையின் தலைவனாகப் புகழ் பூத்த ஒரு மாவீரன் படை நடத்திச் செல்ல தகுந்த ஏற்பாடுகளையும் செய்தார். அந்த மாவீரன் யார் என்ற கேள்விக்கான பதில் தேடுவது ஒரு சவாலான விஷயமாகவே இது வரையில் இருந்துள்ளது. இராஜேந்திரர், போருக்குத் தினவெடுத்த தோள்களுடன் தயார் நிலையில் இருந்தத் தனது களிறுகளில் ஒருவரையும் இந்த திக் விஜயத்திற்கு அனுப்பாமல் விட்டிருப்பாரா என்பது அனைவரின் மனதிலும் இயல்பாக எழும் கேள்வி. இதற்கு முந்தைய போர்களில் மனு குல கேசரியின் பங்களிப்பைப் பார்க்கும் போது, உயிருடன் இருந்திருந்தால் அவரே இந்த விஜயத்தைத் தலைமையேற்றிருக்கக் கூடும் என யூகிக்கலாம். கங்கைப் படையெழுச்சியின் படைத்தலைவன் இராஜாதிராஜன், அரையன் இராஜராஜன் என வெவ்வேறு யூகங்கள் வரலாற்று ஆசிரியர்களால் முன் வைக்கப் படுகின்றன. ஆனால், கிடைத்திருக்கும் தரவுகள் மூலம் இந்த திக் விஜயத்தை மேற்கொண்டது வீரமே துணையாகக் கொண்ட வீரணுக்கன் எனப்படும் வீர ராஜேந்திரரே என்பதை அறிய முடிகின்றது.   

இராஜேந்திரன், தான் வட இந்திய விஜயம் செய்யும் கால கட்டத்தில், சோழ நாட்டில் ஆட்சி அமைதியாக நடை பெற வேண்டித் தக்க ஏற்பாடுகள் செய்து விட்டுப் புறப்பட்டதாகத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறிய முடிகின்றது.  இராஜேந்திரரின் கங்கைப் படையெழுச்சிக்கு முந்தையப் படையெடுப்புகளான இலங்கை, பாண்டிய, சேர மற்றும் சாளுக்கிய படையெடுப்புகள்  இந்தத் தக்க ஏற்பாடுகளின் ஒரு பகுதியேயாகும். 

இராஜேந்திரர் கங்கை திக் விஜயம் செய்யும் கால கட்டத்தில் சோழ நாட்டிலும், சோழர்கள் வென்ற பகுதிகளிலும் ஆட்சி செய்த படி நிகராளிகள் பின்வருமாறு இருந்துள்ளனர்:

இலங்கை - சோழ இலங்கேஸ்வரன் - இராஜ மகேந்திரன் 
பாண்டிய நாடு - சோழ பாண்டியன் - இராஜாதிராஜன், இரண்டாம் இராஜேந்திரன் 
சேர நாடு - சோழ கேரளன் - கங்கை கொண்ட சோழன் 
பல்லவ நாடு - மதுராந்தகன் 

இலங்கையில் சோழ லங்கேஸ்வரனாக இராஜ மகேந்திரனும், பாண்டிய நாட்டில் சோழ பாண்டியனாக இரண்டாம் இராஜேந்திரனும், சேர நாட்டில் சோழ கேரளனாக இராஜேந்திரரின் தம்பி கங்கை கொண்ட சோழனும், தொண்டை மண்டலத்தில் சோழ பல்லவனாக மதுராந்தகனும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொள்ள, சோழ நாட்டின் பாதுகாப்பை இராஜாதிராஜன் வசம் ஒப்படைத்து விட்டு, இராஜேந்திரன், வீரணுக்கன் எனப்பட்ட வீர ராஜேந்திரனுடன் கங்கைப் படையெழுச்சிக்குப் புறப்பட்டிருக்க வேண்டும். இதில், இராஜேந்திரரின் தம்பி கங்கைப் படையெழுச்சியில் கலந்து கொண்டிருந்தால், இரண்டாம் இராஜேந்திரரே சேர நாட்டுப் பாதுகாப்பினையும் சேர்த்துப் பொறுப்பேற்றிருக்க வேண்டும். அதைப் போன்றே மதுராந்தகன் தக்க வயதுடையவராக இல்லாதிருந்தால், இராஜாதிராஜனே சோழ நாடு, தொண்டை மண்டலம் என இரண்டுக்குமான பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்திருக்கக் கூடும். 

கோதாவரி, கிருஷ்ணா ஆகிய ஆறுகளுக்கு இதைப் பட்டப் பகுதி வேங்கி நாடு. இது சோழர்களுக்கு உறவினரானக் கீழைச் சாளுக்கியர்கள் ஆண்ட பகுதி என்பதாலும் அதற்குத் தெற்கேயிருந்தப் பகுதி சோழராட்சிக்கு உட்பட்டிருந்ததாலும், வட நாட்டுப் படையெழுச்சி வேங்கி நாட்டின் வடக்கிலிருந்துத் தொடங்கியிருக்க வேண்டும். 

இந்த வட இந்திய விஜயம் கி.பி. 1021-ல் ஆரம்பித்து கி.பி. 1023 வரை ஏறத்தாழ இரண்டாண்டுகள் நடை பெற்றுள்ளது. இந்த நீண்ட கால கட்டத்தில், தான் சோழ நாட்டை விட்டு வெகு தொலைவில் இருப்பது சோழ நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தாக விளையும் என்பதாலும், முன்னேறிச் செல்லும் சோழ நாட்டுப் படைக்கு ஆபத்து ஏற்படின் தக்க சமயத்தில் உதவுவதற்கு வேண்டியும், இராஜேந்திரன் கோதாவரி ஆற்றங்கரையில் ஒரு படையுடன் நிலை கொண்டு, வீரணுக்கன் தலைமையில் வட நாட்டுப் படையெழுச்சிக்கு சோழர் படையை அனுப்பியிருக்க வேண்டும். 

இராஜேந்திரர் வென்ற வட இந்திய மன்னர்களை ஒழுங்கு படுத்திக் கூறுவதில் திருவாலங்காட்டுச் செப்பேடும், இராஜேந்திரரின் மெய் கீர்த்தியும் முரண் படுகின்றன. வட நாட்டுப் போர் நிகழ்ச்சிகள் முடிவு பெற்றதுடன் எழுதப் பட்டது மெய் கீர்த்தி. இப்படையெழுச்சி முடிவு பெற்று சில ஆண்டுகள் கழித்து எழுதப் பெற்றது திருவாலங்காட்டுச் செப்பேடுகள். எனவே இராஜேந்திரரது மெய் கீர்த்தியில் கூறப் படுகின்ற முறையை ஏற்றுக்கொளவதே சிறந்தது என்பது வரலாற்று அறிஞர்களின் முடிவு.

வீர ராஜேந்திரன் தலைமையிலான சோழர்ப்படை வென்ற பகுதிகள்:

1. வீரம் நிறைந்த போர்ப் படையினரைக் கொண்ட சக்கரக் கோட்டம்
2. மதுரா மண்டலம்
3. வளம் நிறைந்த நாமணைக்கோணம்
4. வெஞ்சின வீரர்கள் உள்ள பஞ்சப்பள்ளி 
5. பசுமையான வயல்களையுடைய  மாசுணி தேசம் 
6. அழிவில்லாதப் பெருமையுடைய ஆதிநகர் 
7. அடர்தியானக் காடுகளால் பாதுகாக்கப் பட்ட ஒட்டர தேசம் 
8. பிராமணர்கள் நிறைந்திருந்த கோசல நாடு 
9. தேனீக்கள் நிறைந்த தண்டபுத்தி
10.  எண்டிசையும் புகழ் பெற்ற தக்காண லாடம்
11. மழை ஓய்வு ஒழிச்சலின்றி பெய்யும் வங்காள தேசம்
12. முத்துக் குளிக்கும் கடலோரத்தில் உள்ள உத்தரலாடம் 

இத்தனை நாடுகளையும் வென்று, சோழர்ப் படை கங்கையை அடைந்தது. இந்தப் படையெடுப்பின் போது, சோழர்ப்படை, யானைகளைப் பாலமாக்கி நதியைக் கடந்தது. மீதியுள்ள படை, முன்புள்ள படையின் யானை, குதிரை, காலாள் முதலியோர்ப் பயன் படுத்தியதால் காய்ந்த நதியைக் காலால் கடந்தது.
கங்கை நீரோடுத் தனது திக் விஜயத்தை முடித்துக் கொண்டு திரும்பிய வீர ராஜேந்திரனை, கோதாவரி ஆற்றங்கரையில் பெரு மகிழ்ச்சியோடு இராஜேந்திரன் வரவேற்றார். இந்த கங்கை வெற்றியை மிகப் பெரிய வெற்றியாக சோழர்கள் மட்டுமல்லாது, மற்ற மன்னர்களும் கருதியுள்ளனர். கங்கை வெற்றியின் காரணமாக ராஜேந்திரர், கங்கை கொண்ட சோழன் என்றும், வீர ராஜேந்திரர் கங்கை கொண்டான் என்றும் விருதுப்பெயர் பூண்டுள்ளனர்.  

இந்த  கங்கை வெற்றியினைக் கொண்டு, கங்கை கொண்ட சோழ புரத்தில் ஒரு ஏரி உருவாக்கப் பட்டது. நம் நாட்டில் மனிதர்களால் அமைக்கப் பட்ட ஏரிகளில் இதுவே பெரியது. நீரினால் அமைக்கப்பட்ட ஜயஸ்தம்பம் எனப்படும் அந்த ஏரியின் பெயர் சோழ கங்கம்.

இந்த கங்கை வெற்றிக்குப் பின் வீர ராஜேந்திரன், சோழ கங்கன் என்றும் சோழங்கன் என்றும் அழைக்கப் பட்டிருக்கிறார். எனவே, முதன்முதலில் சோழங்கன் என்று அறியப் பட்டவர் வீர ராஜேந்திரரே என்பதை இதன் மூலம் அறிய முடிகின்றது. கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள சோழனார் குடும்பங்களின்  குடிப்பெயரும்  சோழங்கனார் என இவரைத் தொடந்தே மாறியிருக்க வேண்டும். கீழை கங்கர்களின் குடிப் பெயரும் சோழங்க தேவர் என இவரது மகள் வயிற்றுப் பேரன் அனந்த வர்மன் மூலம், இவரதுப் பெயரைக் கொண்டே மாறியுள்ளதையும் அறிய முடிகின்றது. 

கங்கை வெற்றிக்குப் பின்பு, சோழகங்கன் என்னும் பெயரோடு வீர ராஜேந்திரன் கங்கவாடி உள்ளிட்ட பகுதிகளின் படி நிகராளியாக கி.பி. 1037 வரை நிர்வகித்திருக்கக் கூடும். வீர ராஜேந்திரரைத் தொடர்ந்து அவரதுத் தமையன் இராஜ மகேந்திரன் கி. பி. 1037-லும், அவரைத் தொடர்ந்து இவர்களின் தம்பி மதுராந்தகன் கி.பி 1054-லும் சோழ கங்கன் எனப் பதவி வகுத்துள்ளதை முறையே இராஜாதிராஜன் மற்றும் இரண்டாம் இராஜேந்திரனின் மெய் கீர்த்திகளிலிருந்து அறியலாம். 

உத்தேசமான சோழ கங்கர்களின் பட்டியல் :

1. சோழ கங்கன் I - வீர ராஜேந்திரன் - கி.பி. 1023 - 1037
2. சோழ கங்கன் II - இராஜ மகேந்திரன் - கி.பி. 1037- 1054
3. சோழ கங்கன் III - மதுராந்தகன் - கி. பி. 1054 - 1061 

வீர ராஜேந்திரன் கங்கைப் படையெழுச்சியின் படைத் தலைவனாக இருந்திருக்கலாம் என்பதற்கும், சோழகங்கன் என அழைக்கப் பட்டதற்கும் உள்ள தரவுகளை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம். 

References 

1. சோழர் செப்பேடுகள் - புலவர் வே. மகாதேவன், முனைவர். க. சங்கரநாராயணன் P 523-526
2. சோழர்கள் - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி P 280-284
3. முதலாம் இராசேந்திர சோழன் - ம. இராசசேகர தங்கமணி P 107-133, 162
4. தென்னாட்டுப் போர்க்களங்கள் - பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார் P 244-251 
5. SII Vol 3 No. 28,29
6. SII Vol 5 No. 647
#சோழங்கன்யார் 7

Wednesday, 17 April 2019

சோழங்கன் யார்? #6

இராஜேந்திரரின் சாளுக்கிய  நாட்டுப் படையெடுப்பு - மனு குல கேசரியின் மரணமும் புதிய படி நிகராளிகள் முடி சூடலும் : 

இலங்கை, பாண்டிய மற்றும் சேர நாடுகளை வென்ற பிறகு இராஜேந்திரரின் கவனம் மேலைச்சாளுக்கியம் பக்கம் திரும்பியது. இராஜராஜன், இராஜேந்திரன் மற்றும் அவரது வாரிசுகளுக்கு தகுதி வாய்ந்த எதிரியாக இருந்தது மேலைச் சாளுக்கியமே. எது வரையில் மான்ய கேடத்தைப் பிடிக்கவில்லையோ அதுவரை மலைப் பகுதிகளில் வேட்டையாட மாட்டேன் என இராஜராஜர் சூளுரைக்கும் அளவிற்கு மேலைச் சாளுக்கியர்கள் வலிவுள்ளவர்களாக இருந்தனர். மனுகுல கேசரி, இராஜாதிராஜன், இராஜ மகேந்திரன், மதுராந்தகன் ஆகிய சோழர்களை பலி வாங்கியதும் மேலைச் சாளுக்கியம் தான். அத்தகைய மேலைச் சாளுக்கியமே இராஜேந்திரரின் அடுத்த இலக்காக இருந்தது.

தைல குலத்தின் காலனான இராஜேந்திரன், சோழ பாண்டியனான தன் மகனை மேற்குப் பூமியின் காவலுக்கு வைத்து விட்டு பூமி தேவியின் இடையணியான காஞ்சியை அடைந்தான் என திருவாலங்காட்டுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. இராஜேந்திரர் ஒவ்வொரு படையெடுப்புக்கு முன்பும் சோழ நாட்டிலும், சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிகளிலும் பாதுகாப்புக்கு தக்க ஏற்பாடுகள் செய்து விட்டு சென்றதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறிய முடிகின்றது. சோழ கேரளனான மனு குல கேசரி, சாளுக்கிய படையெடுப்பில் பங்கு பெற்ற காரணத்தினாலேயே மேற்குப் பகுதி (சேர நாடு) பாதுகாப்பையும் சோழ பாண்டியன் வசம் இராஜேந்திரர் கொடுத்திருக்க வேண்டும். இராஜேந்திரரின் இதற்கு முந்தைய போர்களிலும் மனு குல கேசரியின் பங்களிப்பு உள்ளதை அறிய முடிகின்றது. மனு குல கேசரியை இராஜேந்திரரின் இரண்டாவது மகனாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். ஆனால், திருவிந்தளூர்ச் செப்பேடுகள் குறிப்பிடும் இராஜேந்திரரின் முதல் மகன் இராஜராஜன் இவராகவே இருக்கக் கூடும். 

இராஜாதிராஜனின் மெய்கீர்த்தி தனது உறவினர்களுக்கு வழங்கப் பட்ட பதவிகளைக் குறிப்பிடும் போது, சில மெய்கீர்த்திகள் சிறிய தாதையை வானவன் என்றும், திருத்தமையனை வல்லவன் என்றும் குறிப்பிடுகின்றன. வேறு சில மெய் கீர்த்திகள் சிறிய தாதை, திருத்தமையன் இருவருக்கும் வானவன் என்னும் ஒரு பதவியையே பொதுவாகக் குறிப்பிடுகின்றன. இதனை வைத்துப் பார்க்கும் போது முதலாவது மெய் கீர்த்திகளில் குறிப்பிடப் படும் வல்லவன் என்பது வில்லவன் என்றே இருக்கலாம். வில்லவன் என்பது சேரர்களைக் குறிப்பிடும் வார்த்தை. இது உண்மையெனில், மனு குல கேசரி, இராஜாதி ராஜனின் தமையன் என்று பொருள் ஆகும். எனில்,  திருவிந்தளூர்ச் செப்பேடுகள் குறிப்பிடும், இளமையிலேயே மரணமடைந்த இராஜேந்திரரின் முதல் மகன் இராஜராஜன் இவரே என்னும் முடிவுக்கு வரலாம். கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்த மூன்று அரண்மனைகளில் ஒன்று சோழ கேரளன் மாளிகை என்பதிலிருந்தும் இவரது முக்கியத்துவத்தை அறியலாம்.

இதனைப் போன்றே, இராஜாதிராஜர் இளவரசராக முடி சூட்டப்பட்டாரா என்பதும் ஆய்வுக்குரிய விஷயம். அவர் இளவரசராக முடி சூட்டப் பட்டதற்கு உறுதியான ஆதாரம் ஏதேனும் உள்ளதா அல்லது அவரது ஆட்சியாண்டைக் கொண்டு இளவரசராகப் பதவியேற்றதாகக் கணக்கிடுகிறார்களா எனத் தெரியவில்லை.  அவரது ஆட்சியாண்டைக் கொண்டு கணக்கிட்டுள்ளார்கள் எனில், அவர் சோழ பாண்டியனாகப் பதவியேற்றுள்ளதிலிருந்தே ஆட்சியாண்டுக் கணக்கிடப் பட்டிருப்பதாகக் கருதலாம். அவர் இளவரசராக முடி சூட்டப் பட்டிருந்தால், திருவிந்தளூர்ச் செப்பேடுகள் கூறுவது போல், இராஜேந்திரர், தனது மற்றொரு மகனான இரண்டாம் இராஜேந்திரரைத் தனக்கு பின் முடி சூட்ட வேண்டும் என சொல்லியிருக்க வாய்ப்புகள் குறைவு. இரண்டாம் இராஜேந்திரரும், வீர ராஜேந்திரரும் முதலாம் இராஜேந்திரரின் வார்த்தையையும், அமைச்சர்களின் விருப்பத்தையும் மீறி மூத்தவரான இராஜாதிராஜரை முடி சூட்டியிருக்க வேண்டும். வீர ராஜேந்திரரின் மெய் கீர்த்தி குறிப்பிடும் ''அரும்பெறல் தமயனை ஆலவந்தானை இரும்புவி புகழும் ராஜாதி ராஜன் புகழ் ஒலி மணிமுடி சூட்டி'' எனக் குறிப்பிடுவது இந்நிகழ்வாகவும் இருக்கலாம்.

கலி காலத்திற்குக் காலனான  இராஜேந்திரன், கலியின் அடைக்கலமான சாளுக்கிய அரசன் ஜெயசிம்மனை வெல்வதற்காக, காஞ்சியிலிருந்து  கி.பி. 1021-ஆம் ஆண்டில்  பெரும்படையுடன் புறப்பட்டு சென்றதாகத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன. சோழேந்திரர்களில் சிங்கம் போன்றவனுடைய படையும் ஜெயசிம்மனுடைய படையும் ஒன்றோடொன்று சினத்தோடு பெரும்போர் புரிந்தன. எண்ணற்ற அம்புகள் மழையால் திசைகள் மறைக்கப் பட்டதாக செப்பேடுகள் கூறுகின்றன. வலிமை பொருந்திய இரட்டபாடி ஏழரை லட்சம் சோழர்கள் வசமாயிற்று. ஜெயசிம்மன் பயந்தும், தன் புகழுக்கு என்றென்றும் பங்கம் ஏற்படும் வகையிலும் புறமுதுகு காட்டி, எங்கேயோ மறைந்து கொண்டான். சோழர்ப் படை வெற்றி பெற்ற போதிலும், சோழ கேரளன் இப்போரில் வீர மரணம் அடைந்தார்.

இப்போர் துங்கபத்திரை எல்லையை நிலையாக்கும் போராகவே விளங்கியது. மேலைச்சாளுக்கியர் அது கடந்து தெற்கிலும், சோழர் அது கடந்து வடக்கிலும் வென்றனராயினும் இரண்டும் நீடிக்கவில்லை. மற்ற நாடுகளை வென்றதைப் போல், இராஜேந்திரர் சாளுக்கியத்தை முழுமையாக வென்றிருந்தால், அவரது வட இந்தியப் படையெழுச்சியின் விளைவுகள் வேறு மாதிரி இருந்திருக்கும். சோழர் ஆதிக்கம் பெரும்பான்மையான இந்திய நிலப் பரப்பை உள்ளடக்கி, இந்திய வரலாறும், சோழர் வரலாறும் மாற்றி எழுதப் பட்டிருக்கக் கூடும்.

இராஜேந்திர சோழனின் கங்கைப் படையெழுச்சிக்கு முந்தைய இலங்கை, பாண்டிய, சேர, சாளுக்கிய நாட்டுப் படையெடுப்புகளில் ஒரு ஒற்றுமை தெரிகின்றது. ஒவ்வொருப் படையெடுப்பின் வெற்றிக்குப் பின்னரும் தனது மகன்களில் ஒருவரை படிநிகராளியாக வெற்றி பெற்ற நாட்டில் முடி சூட்டியிருக்கின்றார். அதைப் போன்றே ஒவ்வொரு படையெடுப்புக்குப் பின்னரும், அடுத்தப் படையெடுப்புக்கு முன்பு ஒரு சிறிய கால இடைவெளி இருந்துள்ளது. இந்த கால இடைவெளி  சுமார் 6 மாத காலமாக இருந்திருக்கலாம். படைகளுக்கு தேவையான ஒய்வு கொடுக்கவும், அடுத்த படையெடுப்பிற்கான சரியானத் திட்டமிடலுக்கும் இந்தக் கால கட்டம் பயன் பட்டிருக்க வேண்டும். இதில் பாண்டிய மற்றும் சேர நாட்டுப் படையெடுப்பு மட்டும் தொடர்ச்சியாக நடந்துள்ளதாக அறிய முடிகின்றது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது, இராஜேந்திரர் கங்கைப் படையெடுப்பிற்கான முன்னேற்பாடுகளை மிகத் தெளிவாகத் திட்டமிட்டு செயல் படுத்தியுள்ளார் என்பது விளங்கும்.

சோழ கேரளனான மனு குல கேசரியின் மரணத்துக்குப் பின் இராஜேந்திரர் புதிய படி நிகராளிகளை நியமித்திருக்க வேண்டும். அவர்கள்:

1. சோழ பாண்டியன் - இரண்டாம் இராஜேந்திரன் 
2. சோழ கேரளன் - கங்கை கொண்ட சோழன் (இராஜேந்திரரின் தம்பி)
3. சோழ  பல்லவன் - மதுராந்தகன் 

இராஜாதிராஜனின் மெய் கீர்த்தி, தனது தம்பியை பல்லவனாக முடி சூட்டினான் எனக் கூறுகின்றது. பல்லவனாக முடி சூட்டப்பட்டவர் மதுராந்தகன் என முனைவர் பத்மாவதி அவர்கள் தனது "சோழ இலங்கேஸ்வரன் யார்" என்னும் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடுகிறார். மதுராந்தகன் தக்க வயதுடையவராக இருந்திருந்தால், இந்த சாளுக்கிய வெற்றிக்குப் பின்னர், அவர் சோழ பல்லவனாக முடி சூட்டப் பட்டார் எனக் கருதலாம்.  

முதலாம் இராஜேந்திர சோழர் காலம் முதல் வீர ராஜேந்திரன் காலம் வரையிலான உத்தேசமான சோழ பல்லவர்களின் பட்டியல் 

1. மதுராந்தகன் - முதலாம் இராஜேந்திர சோழரின் மகன் - சோழ பல்லவன் - (கி.பி. 1021) - கி.பி.1053
2. ?(வீர ராஜேந்திரன் - கரிகால சோழன் - கி.1054 - கி.பி. 1063)*
3. மதுராந்தகன் - வீர ராஜேந்திர சோழரின் மகன் - சோழ பல்லவன் - கி.பி. 1063 - 1067

* கி.1054 - கி.பி. 1063 கால கட்டத்துக்கு முன்பும் பின்பும் சோழ பல்லவர்கள் நியமிக்கப் பட்டுள்ளதை வைத்துப் பார்க்கும் போது, இந்தக் கால கட்டத்திலும் யாரேனும் தொண்டை மண்டலத்தின்  படி நிகராளியாக இருந்திருக்க வேண்டும். இரண்டாம் இராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் வீர ராஜேந்திரனுக்கு "கரிகால சோழன்" என்னும் பெயர்/பதவி வழங்கப் பட்டுள்ளது. கோழிமன் தொடுகழல் வீர சோழன் என்னும் அடை மொழியைக் கொண்டு இவர் உறையூரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கரிகாலனைத் தொடர்பு படுத்தும் இடங்கள் உறையூர் மற்றும் தொண்டை மண்டலம். காடுகளை அழித்து நாடாக மாற்றித் தொண்டை மண்டலம் என்னும் பகுதியை உருவாக்கியவர் கரிகாலன். எனவே வீர ராஜேந்திரன் படி நிகராளியாளாக இரண்டாம் இராஜேந்திர சோழன் காலத்தில் உறையூரைத் தனியாகவோ அல்லது கூடுதல் பொறுப்பாகத் தொண்டை மண்டலத்துடன் சேர்த்தோ ஆட்சி செய்து   இருக்கலாம். முதலாம் இராஜராஜனின் அண்ணன் ஆதித்த "கரிகாலனும்" தொண்டை மண்டலத்தை நிர்வகித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.  


 References 

1. SII Vol 8 No. 199 : P 98-99
2. SII VOL 5: 520 P 208
3. சோழர் செப்பேடுகள் - புலவர் வே. மகாதேவன், முனைவர். க. சங்கரநாராயணன் P 521-523
4. சோழர்கள் - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி P 277-278
5. தென்னாட்டுப் போர்க்களங்கள் - பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார் P 243-244
6.  கங்கை கொண்ட இராஜேந்திர சோழன் - மனுகுல கேசரி ஓர் ஆய்வு - பேரா. ம. இராசசேகர தங்கமணி, திருமதி இரா. தமிழ்ப்பொன்னி ப 456-460 


#சோழங்கன்யார் 6

Tuesday, 16 April 2019

சோழங்கன் யார்? #5

சேர நாட்டுப் படையெடுப்பு - சோழ கேரளன் படி நிகராளியாக முடி சூடல் 

இராஜேந்திரன் பாண்டிய நாட்டின் வெற்றியைத் தொடர்ந்து சேர நாட்டின் மீதுப் படையெடுத்துச் சென்று, சேரர்களின் முடியையும், மாலையையும் கைப் பற்றிக் கொண்டு பழந்தீவையும் வெற்றி பெற்றார். யாரும் கிட்டுதற்கரிய அரண்களையுடைய சாந்திமத் தீவில் பரசுராமனால் வைக்கப் பட்டிருந்த செம்பொன் முடியைக் கி.பி.1019-ஆம் ஆண்டு வாக்கில் கைப்பற்றினார்.

இந்த வெற்றிக்குப் பிறகு, இராஜேந்திரன் தனது மகன் மனுகுல கேசரிக்கு சோழகேரளன் என்னும் பட்டம் வழங்கி கேரள நாட்டின் படி நிகராளியாக்கினார். இவரே முதலாவது சோழ கேரளன்.  பல்வேறு போர்களில் ஈடுபட்ட சோழகேரளன் கி.பி 1021-இல் இறந்தார். இவரது பெயரில் மனு குல கேசரி நல்லூர், சோழ கேரள புரம் முதலிய ஊர்களும், சோழ கேரள விண்ணகரம், மனு குல கேசரீச்சரம் ஆகிய திருமால், சிவன் கோயில்களும் தோன்றியுள்ளன.  

இராஜாதிராஜனின் மெய்கீர்த்தி தனது உறவினர்களுக்கு வழங்கப் பட்ட பதவிகளைப் பின் வருமாருக் கூறுகின்றது

" தன் சிறிய தாதையும் திருத்தமையனுங் குறிகொள் தன்னிளங் கோக்களையும் நெறியுணர் தன்றிரு புதல்வர் தம்மையும் வானவன் வல்லவன் மீனவன் கங்கன் இலங்கையற்கிறைவன் பல்லவன் கன்னகுச்சியர் காவலன் என பொன்னணி சுடர்மணி மகுடஞ்சூட்டி" 

இந்த மெய்கீர்த்தி,  இராஜாதிராஜன்  தனது சிறிய தந்தையை வானவன் என்று முடி சூட்டியதாக கூறுகிறது. வானவன் என்பது சேரர்களைக் குறிப்பிடும் வார்த்தை. இராஜாதிராஜனின் மெய் கீர்த்தியில் குறிப்பிடப்படும் மீனவன் என்பது சோழ பாண்டியனையும், கங்கன் என்பது சோழ கங்கனையும், இலங்கையற்கிறைவன் என்பது சோழ இலங்கேஸ்வரனையும், பல்லவன் என்பது சோழ பல்லவனையும் குறிப்பது போல், வானவன் என்பது சோழ கேரளனைக் குறிக்க வேண்டும். 

மனு குல கேசரியின் மரணத்துக்குப் பின் இரண்டாம் இராஜேந்திரன் சோழ பாண்டியனாகவும், முதலாம் இராஜேந்திரரின் தம்பி சோழ கேரளனாகவும் பதவியேற்றிருக்க வேண்டும்.

இரண்டாம் இராஜேந்திரனின் மெய் கீர்த்தி, மகன்களில் ஒருவரை சோழ கேரளனாக முடி சூட்டியதைக் குறிப்பிடுகின்றது. இந்த சோழ கேரளன், மனு குல கேசரியின் மகனாகவும் இருக்கலாம். இரண்டாம் இராஜேந்திரனின் மெய் கீர்த்தியில் குறிப்பிடப் படும் 6 மகன்களின் பட்டியல் என்பது அவரது சகோதரர்களின் மகன்களையும் சேர்த்ததாகவே இருக்க வேண்டும். ஏனெனில், இரண்டாம் இராஜேந்திரனின் மெய் கீர்த்தியில் குறிப்பிடப் படும் மகன்களின் பட்டியலில் இடம் பெறும் முடி கொண்ட சோழன் எனப்படும் சுந்தர சோழன், வீர ராஜேந்திரரின் மெய் கீர்த்தியில் குறிப்பிடப் படும் மகன்களின் பட்டியலிலும் அதே பெயரில் இடம் பெறுகிறார். அதைப் போன்றே வீர ராஜேந்திரரின் மெய் கீர்த்தியில் குறிப்பிடப் படும் திண் திறல் மைந்தனான கங்கை கொண்ட சோழன் என்பவரும், இரண்டாம் இராஜேந்திரனின் மெய் கீர்த்தியில் குறிப்பிடப் படும் திண் திறல் கடாரம் கொண்ட சோழன் என்பவரும் ஒருவராக இருக்கலாம். திண் என்றால் வலிமை, திறல் என்றாலும் வலிமை. இது வெறும் அடைமொழியாக குறிப்பிடப் பட்டுள்ளதா அல்லது அவரின் தந்தை பெயர் குறித்து வந்துள்ளதா என்பது தெரியவில்லை. 

உத்தேசமான சோழ கேரளன் பட்டியல் 

1. மனு குல கேசரி - இராஜாதிராஜனின் சகோதரன் - சோழ கேரளன் - கி.பி. 1019 - கி.பி.1021
2. கங்கை கொண்ட சோழன் - முதலாம் இராஜேந்திரரின் தம்பி - சோழ கேரளன் - கி.பி. 1021 - கி.பி. 1052
3. சோழ கேரலன் - இரண்டாம் இராஜேந்திரனின் (அல்லது மனுகுல கேசரியின்) மகன் - சோழ கேரளன் - கி.பி 1052 - ?

References 

1. பிற்கால சோழர் வரலாறு - சதாசிவ பண்டாரத்தார் - ப 158-159  
2. கங்கை கொண்ட இராஜேந்திர சோழன் - மனுகுல கேசரி ஓர் ஆய்வு - பேரா. ம. இராசசேகர தங்கமணி, திருமதி இரா. தமிழ்ப்பொன்னி ப 456-460
3. SII Vol V - No 520 
4. SII Vol 24 - No 23 
5. SII Vol VIII - No 1
6. SII Vol VII - No 139
7. SII Vol VII - No 140
8. SII Vol VII - No 881

#சோழங்கன்யார் 5


Monday, 15 April 2019

சோழங்கன் யார்? #4


இராஜேந்திரரின் பாண்டிய நாட்டுப் படையெடுப்பு - சோழ பாண்டியன் படி நிகராளியாக முடி சூடல் 

ஈழப்படையெடுப்பைத் தொடர்ந்து பாண்டியர்களுக்கு எதிரான படையெடுப்பை இராஜேந்திரன் கி.பி. 1018-ல் மேற்கொண்டார். இதை இம்மன்னனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உறுதி செய்கின்றன. பாண்டியர்களுடைய ஒளி பொருந்திய மாசில்லாத முத்துக்களைக் கவர்ந்தான் என்று செப்பேடுகள் கூறுகின்றன. இந்த வெற்றியைத் தொடர்ந்து,  இராஜேந்திரன், இராஜாதிராஜனை சோழ பாண்டியன் என்னும் பட்டத்துடன் பாண்டிய நாட்டை ஆளும்படி படிநிகராளியாக நியமித்தார். இதனைத் திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் உறுதி செயகின்றன.

சோழ பாண்டியர்கள் ஒருவர் பின் ஒருவராக மாறவர்மன், ஜடாவர்மன் என்னும் பாண்டிய மன்னர்களின் மாறிவரும் சிங்காதனப் பெயர்களைச் சூடிக் கொண்டனர். இராஜாதிராஜன், இரண்டாம் இராஜேந்திரன், இராஜ மகேந்திரன் மற்றும் வீர ராஜேந்திரனின் மகன் கங்கை கொண்ட சோழன் ஆகிய நால்வரும் வரிசையாக சோழ பாண்டியன் என பதவி வகித்தவர்கள். இவர்களில் யார், எந்த பெயருடன் சோழ பாண்டியன் என ஆட்சி செய்தார்கள் என்பதில் வரலாற்று ஆய்வாளர்களுக்கிடையே கருத்து வேறுபாடு உள்ளது. சோழ பாண்டியர்களின் முறையானப் பெயர்களைக் கண்டறிய வீர ராஜேந்திரனின் மகனான கங்கை கொண்ட சோழனின் கல்வெட்டு ஒன்று உதவுகின்றது. கங்கை கொண்ட சோழன், ஜடாவர்மன் சோழ பாண்டியன் என அந்தக் கல்வெட்டின் மூலம் அறியப் படுகின்றார். எனவே இவருக்கு முன் பதவி வகித்தவர் பாண்டிய மன்னர்களின் ஒழுகலாற்றின் படி மாறவர்மன் என்னும் பெயருடையவராக இருக்க வேண்டும். அதாவது மாறவர்மன் பராக்கிரம  சோழ பாண்டியன் என்பவர் இராஜ மகேந்திரனாக இருக்க வேண்டும். அவருக்கும் முன்பு பதவி வகித்தவர் ஜடாவர்மன் என அழைக்கப் பட்டிருக்க வேண்டும். எனவே  இரண்டாம் இராஜேந்திரனே ஜடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன். இவருக்கு முன்பு சோழ பாண்டியனான இராஜாதி ராஜனே மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியன்.

இந்த மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியனை, முதலாம் இராஜேந்திரரின் தம்பி மகன் என கணிக்கிறார் குடந்தை N. சேதுராமன் அவர்கள். கூழம்பந்தலில் உள்ள இராஜாதிராஜனின் 33-ம் ஆட்சியாண்டின் கல்வெட்டின் துணை கொண்டு இந்த முடிவிற்கு வந்துள்ளார். ஆனால், அதில் கூறப்பட்டிருக்கும் மெய் கீர்த்தி, தனது உறவினர்களுக்கு இராஜாதி ராஜன் பதவிகள் கொடுத்துள்ளதைக் குறிப்பிடுகின்றதே தவிர யார் யாருக்கு என்னென்ன பதவிகள் என்று குறிப்பிடவில்லை. மெய் கீர்த்தி குறிப்பிடும், "கன்னி காவலர் தென்னவர் மூவருள் வானகம் இருவருக்கருளி கானகம் ஒருவருக்களித்து" என்னும் தொடரை ராஜாதிராஜனின் உறவினர்களுக்கு அளிக்கப் பட்ட பதவிகளாகக் கருதியுள்ளார் திரு. சேதுராமன் அவர்கள். உண்மையில் இந்த வரிகள், இராஜாதிராஜன் பாண்டியர்களை வென்றதைக் குறிப்பிடும் வரிகள். அவரின் மற்ற மெய் கீர்த்திகளின் துணை கொண்டு இதை ஆராய்ந்தோமானால் அது விளங்கும். அவரது மற்ற மெய் கீர்த்திகள் பின் வருமாறு குறிப்பிடுகின்றன.

"மன்னு பல்லூழியுள் தென்னவர் மூவருள் மாநாபரணன் பொன்முடி ஆநா பரு (மணிப் பசுந்தலை)ப் பொருகளத் தரிந்து வாரளவியகழல் முனைவையிற் பிடித்துத் தந்திவாரணக் கடக் களிற்றால் உதைப்பித்தருளி அந்தமில் பெரும்புகழ் சுந்தர பாண்டியன் ஒற்றை வெண்குடையும்  கற்றை வெண் கவரியும்  சிங்காதனமும் வெங்களத் திழந்து தன்முடி விழ தலை விரித் தடிதளர்ந்தொடத் தொல்லையில முல்லையூர் துரத்தி".

இராஜாதி ராஜன் மூன்று பாண்டியர்களுடன் போரிட்டு, மூவருள் மானாபரணனை போர்க்களத்தில் தலை அரிந்தும், வீர கேரளன் தலையை யானையைக் கொண்டு காலால் உதைப்பித்துக் கொன்றும், மூன்றாவது பாண்டியனான சுந்தர பாண்டியனை வெண்குடை, சிங்காதனம் ஆகியவற்றை இழந்து மணி முடி கீழே விழத் தலை விரி கோலமாகக் காட்டிற்குள் துரத்தினான் எனக் கூறுகின்றது. இதேக் கருத்தைத்தான் கூழம்பந்தல் கல்வெட்டும், "கன்னி காவலர் தென்னவர் மூவருள் வானகம் இருவருக்கருளி கானகம் ஒருவருக்களித்து" என்று குறிப்பிடுகின்றது. அதாவது பாண்டியர்கள் மூவருள் வானகம் (வானலோகம்) இருவருக்களித்து, கானகம் ஒருவருக்களித்ததாக அதுக் குறிப்பிடுகின்றது. எனவே, மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியன், குடந்தை N. சேதுராமன் அவர்கள் குறிப்பிடுவது போல் முதலாம் இராஜேந்திரரின் தம்பி மகன் இல்லை. திருவாலங்காட்டுச் செப்பேடுகள், பாண்டிய நாட்டுப் போருக்குப் பின் (கி.பி. 1018) சோழ பாண்டியன் நியமிக்கப் பட்டதைக் குறிப்பிடுகின்றது. எனவே இராஜாதிராஜனே,  மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியன் என்னும் முடிவுக்கு வரலாம்.   

மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியனின் 20 முதல் 25-ம் ஆண்டு வரையிலான கல்வெட்டுக்களேக் கிடைக்கின்றன. ஜடாவர்மன் சுந்தர சோழ பாண்டியனின் 30-ம் ஆண்டு வரையிலானக் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இராஜாதிராஜன் கி.பி. 1018-ல் சோழ பாண்டியனாக முடி சூட்டிய பின் 25 ஆண்டுகள் எனில் கி.பி 1043-ஐ குறிக்கும். இதன் பின் கி.பி. 1044-ல் அவர் சோழ மன்னனாக முடி சூடினார். இரண்டாம் இராஜேந்திரன் கி.பி. 1021-ல் சோழ பாண்டியனாக முடி சூட்டிய பின் 30 ஆண்டுகள் எனில் கி.பி 1051-ஐ குறிக்கும். இதன் பின் கி.பி. 1052-ல் அவர் சோழ மன்னனாக முடி சூடினார். எனவே மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியனின் 25 ஆண்டு கால ஆட்சி இராஜாதிராஜனுடனும், ஜடாவர்மன் சுந்தர சோழ பாண்டியனின் 30 ஆண்டு கால ஆட்சி இரண்டாம் இராஜேந்திரனுடனும் ஒத்துப் போகின்றன.

ஆனால் இராஜாதிராஜனின் முதல் 19 ஆண்டு கால கல்வெட்டுகளும், இரண்டாம் இராஜேந்திரனின் 24 முதல் 29-ம் ஆண்டு வரையிலான கல்வெட்டுகளும் கிடைக்கவில்லை. இதற்கானக் காரணங்களை பார்ப்போம்.

இராஜாதிராஜன் கி.பி. 1018-ல் பாண்டிய நாட்டின் வெற்றிக்குப் பிறகு சோழ பாண்டியனாக முடி சூட்டப் பட்டார். அதனைத் தொடர்ந்த கேரள நாட்டின்போர்களிலும், பின்பு கங்கைப் படையெழுச்சிக்கான முன்னேற்பாடுகள், நாட்டு நிர்வாகம் என இளவரசருக்கான வேலைகளை அவர் கவனித்திருக்க வேண்டும். 

கி.பி. 1021-ல் சோழ கேரளனான இவரின் சகோதரர் மனு குல கேசரி இறந்த பின்பு, ஜடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்னும் பெயருடன் இரண்டாம் இராஜேந்திரனும் சோழ பாண்டியனாக நியமிக்கப் பட்டார். இரண்டாம் இராஜேந்திரனே, பாண்டிய நாட்டில் நிரந்தமாகத் தங்கி பாண்டிய நாட்டு நிர்வாகத்தினை கவனித்திருக்க வேண்டும். இதனாலேயே, ஜடாவர்மன் சுந்தர சோழ பாண்டியனின் கல்வெட்டுகள் நிறையக்  கிடைக்கின்றன. இது போன்ற சூழ்நிலையே, இரண்டாம் இராஜேந்திரனுக்கும் கி.பி. 1044-ல் இளவரசனாகப் பதவியேற்ற பின் நிகழ்ந்திருக்க வேண்டும். இவையே, மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியனின் முதல் 19 ஆண்டுகள் வரையிலான கல்வெட்டுகளும், ஜடாவர்மன் சுந்தர சோழ பாண்டியனின் 24 முதல் 29-ம் ஆண்டு வரையிலான கல்வெட்டுகளும் கிடைக்கப் பெறாததற்கு காரணமாக இருக்கலாம். 

மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியனின் 20-ம் ஆண்டு முதலானக் கல்வெட்டுகள் கிடைப்பதற்கு காரணம் அந்தக் கால கட்டத்தில் செய்யப் பட்ட அரசியல் மாற்றங்களே ஆகும். மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியனின் 20-ம் ஆண்டு என்பது கி.பி. 1037/38. 

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் கி.பி. 1036-ல் கட்டி முடிக்கப் பட்டதாகக் கருதப் படுகிறது. அதனைத் தொடர்ந்து, சோழ நாட்டின் படி நிகராளிகளின் பொறுப்புகளில் சில மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. அதுவரை சோழ இலங்கேஸ்வரனாகப் பதவி வகித்து வந்த இராஜ மகேந்திரன், சோழ கங்கன் என்னும் பெயருடன் கங்கவாடிப் பகுதியின் படி நிகராளியாக கி.பி. 1037-ல் பதவியேற்றார். சோழ கங்கனான வீர ராஜேந்திரன், சோழ இலங்கேஸ்வரனாக கி.பி. 1038-ல் பதவியேற்றார். இராஜாதிராஜனும் இந்தக் கால கட்டத்தில் தான் சோழ பாண்டியனாக, பாண்டிய நாட்டில் நிரந்தரமாகத் தங்கியிருக்க வேண்டும். இதுவே அவரின் 20-ம் ஆண்டு முதலான சோழ பாண்டியனின் கல்வெட்டுகள் கிடைப்பதற்கு காரணமாக இருக்கலாம்.

உத்தேசமான சோழ பாண்டியர்கள் பட்டியல் 

1. சோழ பாண்டியன் I - மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியன் - இராஜாதிராஜன் - 25 ஆண்டுகள் - கி.பி. 1018 - 1043
2. சோழ பாண்டியன் II - ஜடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன் - இரண்டாம் இராஜேந்திரன் - 30 ஆண்டுகள் - கி.பி. 1021 - 1051 (30th year A. R. No. 395 of 1929-30 SII XIV ப 93, Chola Pandiyan-Chola Gangan-Chola Lankesvaran-Chola Keralan - N. Sethuraman P 65 Note 24)
3. சோழ பாண்டியன் III - மாறவர்மன் பராக்கிரம  சோழ பாண்டியன் - இராஜ மகேந்திரன் - கி.பி. 1054 - 1062
4. சோழ பாண்டியன் IV - ஜடாவர்மன் சோழ பாண்டியன் - கங்கை கொண்ட சோழன் - கி.பி. 1063 - 1069 (A. R. No. 642 of 1916.)



References 

1. பிற்கால சோழர் வரலாறு - சதாசிவ பண்டாரத்தார் - ப 158
2. A.R.E 642 of 1916
3. SII Vol 7  No. 1046 P 504
4. SII Vol 24 No. 23 : P 16 
5. சோழர் செப்பேடுகள் - புலவர் வே. மகாதேவன், முனைவர். க. சங்கரநாராயணன் P 520
6.  இராஜேந்திரன் செய்திக் கோவை -  பதிப்பாசிரியர் முனைவர் சீ. வசந்தி, ஆசிரியர் வெ. இராமமூர்த்தி P 20 

Sunday, 14 April 2019

சோழங்கன் யார்? #3

இராஜேந்திரரின் இலங்கைப் படையெடுப்பு - சோழஇலங்கேஸ்வரன் படிநிகராளியாக முடிசூடல்

இராஜேந்திரர், கி.பி 1017-ல் இலங்கையின் மீதுப் படையெடுத்து, இலங்கையை வெற்றி கொண்டதோடு, இலங்கை மன்னனின் மணி முடியையும், பராந்தக சோழன் காலத்தில் பாண்டியர்கள் அங்கு மறைத்து வைத்திருந்த பாண்டியர்களின் சுந்தர மணி முடியையும், இந்திரன் ஆரத்தையும் கைப்பற்றியதோடு, இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தனையும் அவர் மனைவியையும் சிறை பிடித்து வந்தார். சிங்கள மன்னன் 12 ஆண்டுகள் சோழ நாட்டு சிறையில் இருந்து பின் கி.பி. 1029-ல் உயிர் நீத்தான். 

இராஜேந்திரர், இலங்கையை வென்ற பிறகு தன் நாடு திரும்பும் போது, இலங்கையில் தன் பிரதிநிதியாக சோழ இலங்கேஸ்வரன் என்னும் பட்டத்துடன் தனது மகன்களில் ஒருவரை நியமித்து இருக்க வேண்டும். அவரின் பெயர் ஜெயங்கொண்ட சலாமேகன். 

சோழர்கள் ஒருவர் பின் ஒருவராக ராஜகேசரி, பரகேசரி என்னும் தங்களின் முன்னோர்களின் பெயர்களை சிங்காதனப் பெயர்களாக சூடிக் கொண்டனர். இதைப் போன்றே சோழ இலங்கேஸ்வரர்களும் ஒருவர் பின் ஒருவராக அபைய சலாமேகன், சங்கப் போதிவர்மன் என்னும் சிங்கள மன்னர்களின் மாறிவரும் சிங்காதனப் பெயர்களைச் சூடிக் கொண்டனர். இந்த ஜெயங்கொண்ட சலாமேகன் என்பவரே முதலாவது சோழ இலங்கேஸ்வரன் என்று கலாநிதி கா. இந்திரபாலா குறிப்பிடுகின்றார். ஆனால், இந்த ஜெயங்கொண்ட சலாமேகன் இராஜேந்திர சோழனின் படைத் தலைவனான மூவேந்த வேளானாக இருக்கக் கூடும் என கணிக்கிறார் அவர். இராஜேந்திரர், தனது மகன்களையே சோழ பாண்டியன், சோழ கேரளன், சோழ கங்கன், சோழ இலங்கேஸ்வரன் எனப் பட்டம் கொடுத்து படி நிகராளிகளாக நியமித்துள்ளார். எனவே இந்த சோழ இலங்கேஸ்வரனும் இராஜேந்திரரின் மகனாகவே இருக்க வேண்டும். 

ஜெயங்கொண்ட சோழன் என்பது முதலாம் இராஜாதிராஜனின் பெயர். ஆனால்,  இராஜாதிராஜன் இதற்குப் பின் கி.பி. 1018-ல் பாண்டியர்களுடன் நடை பெற்றப் போரில் வெற்றி பெற்ற பிறகு, சோழ பாண்டியன் என முடி சூட்டப் பட்டவர். அதன் பின் நடை பெற்ற கேரளப் போரின் வெற்றிக்குப் பிறகு, இராஜேந்திரரின் மற்றொரு மகனான மனு குல கேசரி சோழ கேரளன் என முடி சூட்டப் பட்டவர். கி.பி. 1021-ல் மனு குல கேசரி இறந்த பிறகு, இரண்டாம் இராஜேந்திரனும் சோழ பாண்டியனாக முடி சூட்டப் பட்டுள்ளார். வீர ராஜேந்திரன், இரண்டாவது சோழ இலங்கேஸ்வரனாக கி.பி. 1038-ல் சங்கப் போதிவர்மன் என்னும் பெயருடன் பதவியேற்றவர். எனில், எஞ்சிய இராஜ மகேந்திரனே இங்குக் குறிப்பிடப் படும் ஜெயங்கொண்ட சலாமேகனாக இருக்க வேண்டும். இராஜ மகேந்திரன்  கி.பி 1017 - லிருந்து கி.பி 1037 வரை சோழ இலங்கேஸ்வரனாக பதவி வகித்திருக்க வேண்டும். 

இலங்கைப் பேராசிரியர் கா. இந்திரபாலா அவர்கள், இலங்கையில் உள்ள கந்தளாய் (கங்க தலா (கங்கை தடாகம்) = கந்தளாய்) சிவன் கோயிலின் ஒரு கல்வெட்டினை கி.பி. 1972-ல் பதிப்பித்தார்.  அது கந்தளாயான ராஜராஜ சதுர்வேதி மங்கலத்து சபையாரால் எழுதப் பட்ட சாசனம். அந்த கல்வெட்டின் வாசகத்தை விளக்கக் குறிப்புகளோடு  கா. இந்திரபாலா வெளியிட்டார். இந்தக் கல்வெட்டே முதன் முதலில் சோழ இலங்கேஸ்வரன் பற்றி கண்டறியப்பட்டக் கல்வெட்டு. இதனைப் பற்றி, "சோழ இலங்கேஸ்வரன் யார்" என்னும் விரிவான ஆய்வுக் கட்டுரை ஒன்றினை எழுதியுள்ள முனைவர் பத்மாவதி அவர்கள், இந்த கல்வெட்டில் குறிப்பிடப் படும் சங்கப் போதிவர்மன், வீர ராஜேந்திரன் தான் என பல்வேறு சான்றுகளைக் கொண்டு நிறுவியுள்ளார்.எனவே இராஜ மகேந்திரனைத் தொடர்ந்து, இரண்டாவது  சோழ லங்கேஸ்வரனாக சங்கப் போதிவர்மன் என்னும் பெயருடன் வீர ராஜேந்திரன்  கி.பி. 1038 பிப்ரவரியில் பதவியேற்றார். 

இரண்டாம் இராஜேந்திரரின் ஆட்சிக் காலத்தில் கரிகால சோழன் என்று உறையூரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வரை வீர ராஜேந்திரன் சோழ லங்கேஸ்வரனாகவே  தொடர்ந்து பதவி வகித்திருக்க வேண்டும். இவருக்குப் பின் இரண்டாம் இராஜேந்திரரின் மகன் உத்தம சோழன், விக்ரம சலாமேகன் என்னும் பெயருடன் சோழ லங்கேஸ்வரனாகப் பதவி வகித்துள்ளார்.

உத்தேசமானசோழஇலங்கேஸ்வரர்கள் பட்டியல் :

1. சோழஇலங்கேஸ்வரன் I - ஜெயங்கொண்டசலாமேகன் - இராஜமகேந்திரன் - கி.பி. 1017 - 1037
2. சோழஇலங்கேஸ்வரன் II - சங்கப்போதிவர்மன் - வீரஇராஜேந்திரன் - கி.பி. 1038 - 1054
3. சோழஇலங்கேஸ்வரன் III - விக்ரமசலாமேகன் - உத்தமசோழன் (இரண்டாம்இராஜேந்திரரின்மகன்) - கி.பி. 1055 - (1070) 

References

1. பிற்காலசோழர்வரலாறு - சதாசிவபண்டாரத்தார் - 156-158
2.  இலங்கைத்தமிழ்சாசனங்கள் - பேராசிரியர்சி. பத்மநாதன் P 26,63,187 
3. அருண்மொழிஆய்வுத்தொகுதி - சோழஇலங்கேஸ்வரன்யார்? - முனைவர்பத்மாவதி   192-199
4. கங்கைகொண்டஇராஜேந்திரசோழன் - இராசேந்திரனும்இலங்கையும் - புலவர்முனைவர்செ. இராசுப 415-419