Wednesday, 24 April 2019

சோழங்கன் யார்? #13

சோழங்கன், கங்கை கொண்டான் 

வீர ராஜேந்திரன், சோழலங்கேஸ்வரனாக இலங்கையில் கி.பி.1038-54 காலகட்டத்தில்  ஆட்சி செய்துள்ளார். இந்தக் கால கட்டத்தில், இவர் சோழங்கன் என்றே அறியப் பட்டிருக்கிறார். இலங்கைப் பேராசிரியர் வேலுப் பிள்ளையும், 'சோழ லங்கேஸ்வரன்', 'சோழகங்கன்' இருவரும் ஒருவரே எனக் குறிப்பிடுகிறார்.

இலங்கையின் வட பகுதியில், பருத்தித்துறை ---> நெல்லியடி ---> சாவகச்சேரி வீதியின் 5-ஆம் மைல் கல்லின் வடக்கும் தெற்குமாக அமைந்துள்ள பெரிய பகுதி காரணவாய் எனப்படும். இதன் தெற்கு எல்லையில் பரவைக் கடல் உள்ளது. இங்கு கங்கை கொண்டான், சோழங்கன் என்னும் ஊர்கள் அமைந்துள்ளன. கங்கை கொண்டான் என்ற பெயரை வைத்துப் பார்க்கும் போது, இது கங்கை வெற்றிக்குப் பின்னர், இராஜேந்திர சோழன் காலத்திலேயே குறிப்பாக வீர ராஜேந்திரன் சோழ லங்கேஸ்வரனாகப் பதவி வகித்த காலத்திலேயே அமைக்கப் பட்டிருக்க வேண்டும். இராஜேந்திரர், கங்கை வெற்றிக்குப் பின் கங்கை கொண்ட சோழன் என்று அறியப் பட்டவர். அதைப் போன்றே கடார வெற்றிக்குப் பின் கடாரங்கொண்டான் என அழைக்கப் பட்டவர். எனில், இங்கு குறிப்பிடப் படும் கங்கை கொண்டான் என்பது வீர ராஜேந்திரரையேக் குறிக்க வேண்டும். அதைப் போன்றே சோழங்கன் என்பதும் வீர இராஜேந்திரரையேக் குறிக்க வேண்டும். அப்படி இல்லையெனில், இவை இரண்டும் முதலாம் இராஜேந்திரரைக் குறிக்க வேண்டும். எனினும் மற்ற தரவுகளை வைத்துப் பார்க்கும் போது, இவை வீர ராஜேந்திரரையே குறிப்பிடுகின்றன  என்பது புலனாகின்றது.

தோம்புகளில் இடம்பெற்றுள்ள “சோழங்கன்புலம்”, “சோழங்கன் வளவு” முதலான காணிப் பெயர்கள் இன்றும் மக்கள் வழக்கிலுள்ளன.

References 

1.  குளக்கோட்டன் தரிசனம் .84-85
2.  இலங்கை இடப்பெயர் ஆய்வு -2  108
3.  பேராசிரியர் இ. பாலசுந்தரம் http://varanyontrium.ca/index.php?option=com_content&view=article&id=195:2014-03-13-16-45-55&catid=98&Itemid=653


#சோழங்கன்யார் 13

No comments:

Post a Comment